ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தலைவனாக தான் எம்பெருமானாலே நியமிக்கப்பட்டிருந்தும், தேவகுரு சாபத்தால் பூமியில் அலைந்தான் பிரமன்..
பதவி பறி போய்விடும் என்றால் யார் தான் விசனப்பட மாட்டார்கள்.. அதிலும் பிரம்ம பதவி என்பது எத்தனை உயர்ந்தது .
ஆயிரங்கோடி யுகங்கள் பகவானைப் பூசித்து, பிரமன் இவ்வுலகங்களைப் படைக்கும் தகுதியை ( மீண்டும் ) அடைகின்றானாம் !!
அப்படி அரும்பாடுபட்டுப் பெற்ற பெருஞ்செல்வம் இப் பிரமபதவி !
ஆயிரம் அச்வமேதங்கள் செய்தால் தான் பதவி நிலைக்கும் ! சரி ! ஆயிரம் வேள்விகள் வளர்ப்பது நிச்சயமாகி விட்டது .. பதவியைக் காப்பாற்றிக் கொள்வது இருக்கட்டும் ! நாம் ஏன் இறைவனை தரிசிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது ?!
பாரத தேசம் வந்து, வேள்வி(களு)க்கான சரியான இடம் தேடி அலைந்து கொண்டிருந்தான் .. வேள்வி ; விடை தெரியாக் கேள்வியாய் அவனை வாட்டிக் கொண்டிருந்தது !
முதலில் தன் பலத்தில் , தன் முயற்சியினால் இறையனுபவம் பெற விழைந்திட்ட பிரமனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
நிலவைப் பிடிக்க முயன்று , அது கை கூடாத வருத்தத்தில் அழும் குழந்தையைப் போல் ஓவென அழலானான் வாணீ நாதன் !
பிறகு தான் நம் முயற்சியினால் அவனை அடைவது சிரமம் என்பதனையும் , அவனைக் கொண்டே அவனை அடைய வேண்டும் என்பதனையும் நன்கு புரிந்து கொண்டான் !
அவனை ( பரமனை ) நம்புவதொன்றே வழி ! அவனே வழி காட்டுவான் என்று உளமாற நம்பினான் ! ” நம்பிக்கையே பலம் ” என்று உணர்ந்தான் !
சிரமமான தருணத்திலும் மிகச் சரியான முடிவெடுத்தான் பத்மாஸனன் !
அப்போது தான் அசரீரி வார்த்தையைக் கேட்டான் !
என்ன பிரம்ம தேவா !! நலமா ?
அசரீரி இப்படிக் கேட்கவும் , இது ; தான் தரிசிக்க விரும்பும் பரமாத்மாவின் குரல் தான் என்று ( அயன் ) புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை !
பெருமானே ! நலமா என்றா தேவரீர் ( நீங்கள் ) வினவுவது !? என் நிலைமையை என்னை விட நன்கு அறிந்தவரன்றோ நீர் !!
உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிபவரன்றோ நீர் !
“யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வ வித் ” என்று உம்மை அனைத்தும் அறிந்தவர் என்றன்றோ வேதாந்தம் அறைகின்றது !
மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் கதி : ஸுஹ்ருத் நாராயண : என்கிற படியே சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் எந்தமக்கு நீரே அன்றோ !
ஆனால் நாங்களோ உம்மை மறந்து , எங்களையே பெரியவர்களாகக் கருதிக் கொண்டு அஹங்கரித்துத் ( நான் , எனது போன்ற தீய குணமுடையவர்களாய் ) திரிபவர்களானோம்.
நீ கொடுத்த படைப்புத் தொழிலைச் செய்யும் நான் , நீ தான் என்னுள் இருந்து ( அந்தர்யாமியாய் ) அனைத்தையும் செய்கிறாய் என்பதனை மறந்து , என்னை விடப் பெரியவன் யாருமில்லை என்று எத்தனை ஆட்டம் போட்டிருக்கிறேன் தெரியுமா ?
சாதாரண ஜீவனான நான் உனதருளால் அன்றோ பிரம பதவியில் இருக்கிறேன். ஆயினும் ஒரு நாளும் உனக்கு நான் நன்றி சொன்னதில்லையே !
தெய்வத்திடம் எதனையும் கேட்டுப் பெறாதே ! அவன் இதுவரை நமக்குத் தந்திருப்பவைகளுக்கு நன்றி சொல்ல மட்டும் அவனிடம் செல் என்று அற நூல்கள் சொல்லியிருப்பதை மறந்து , இது நாள் வரை நாங்கள் யாசிப்பதற்கு மட்டும் தானே உன்னைச் சேவித்திருக்கிறோம்.
இறைவா ! எங்கள் அறியாமை கண்டு உன் மனது எத்தனை வாட்டமடைந்திருக்கும் ! அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட்டதே இல்லையே !
இன்று பார் , என் செயல்களுக்குத் தகுந்த தண்டனை அடைந்து விட்டேன் !
மனைவி விட்டுப் பிரிந்தாள் .. ப்ருஹஸ்பதி சாபம் தந்தார் ..என் நாற்காலி நழுவியது ! ஆயிரம் அச்வமேத யாகங்கள் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன் !
வேள்வி செய்ய சித்த சுத்தி முக்கியம் ! தபஸ்ஸினால் தான் சித்த சுத்தி உண்டாகும் ! தபஸ் செய்ய சமம் தமம் ( உட்புலன் மற்றும் வெளிப்புலனடக்கம் ) முதலான குணங்கள் தேவை ! அவைகள் உண்டாக ஒரு காலாலே நின்று , கைகளைக் குவித்துக் கொண்டும் , மூச்சடக்கிப் பார்த்தும் , அந்தர்யாமியான உன்னைக் காண மனம் பக்குவப்படவேயில்லை !
நான் மொத்தமாகத் தோற்றுப் போனேன் ! கானல் நீர் தேடியோடும் சிறுமானைப் போலே ஆகி நிற்கிறேன் இப்பொழுது ..என்று கதறித் தீர்த்தான் பிரமன் !
சிரித்தது அசரீரி !
மனிதர்களில் சிலரைப் போலே , ஒரு முறை நலமா என்று கேட்டதற்கு மொத்தப் புராணத்தையும் சொல்லி விட்டாயே !!
கவலை வேண்டாம் !! உன் துயர் தீர்க்கவே யாம் பேசுவது !! மனத்தினை ஒருமுகப் படுத்த முடியாமல் நீ தவிப்பது புரிகிறது ! பதவி அதிகாரத்தில் பன்னெடுங்காலம் நீ ஆனந்தங்களை மட்டுமே தொடர்ச்சியாக அனுபவித்து வந்த படியாலும், உன்னுடைய கர்மாவின் காரணமாகவும் நீ தற்சமயம் சிரமப்படுகிறாய் !!
ப்ருஹஸ்பதி ஆயிரம் அச்வமேதங்கள் உன்னால் செய்யப்படவேண்டும் என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார் !
ஏனெனில் அப்போது தான் உனக்கு மனத்தெளிவு ஏற்படும் என்றது அசரீரி !!
வாய் பிளந்து நின்றான் வாணீசன் !!
அவன் நெஞ்சம் இரு பிளவாக போகாமல் நின்றதில்
அவனுக்கே வியப்பு தான் !
அவன் கலக்கம் கண்டு ஆகாச வாக்கு அவனுக்கு விரைவாக இதமுரைக்கத் ( நன்மை உரைக்க ) தொடங்கியது !
நான்முகனே ! உன் கவலை புரிகிறது ! அச்வமேத வேள்வி செய்வதும் கடினம் ..அதுவும் ஆயிரம் வேள்விகள் !! சொல்லவே வேண்டாம் எத்தனை சிரமமென்பதை ! கால தாமதத்தாலும் நீ அல்லலுறுவாய் !
அஞ்சாதே ! உனக்கு ஒரு சுலபமான வழி சொல்கிறேன் ..கேள் .. ஒரு வேள்வி செய்தாலே , ஆயிரமல்ல ..கோடி வேள்விகள் செய்த பலனை நமக்குப் பெற்றுத் தரக் கூடிய ஒரு இடம் இருக்கிறது ! அதனை உனக்குச் சொல்லட்டுமா ? என்று வான் குரல் வினவவும் ;
கரங்களை குவித்தவனாய் , மண்டியிட்டு ஆகாசத்தை நோக்கினவனாய் , பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பிரமன் பேசலானான் !
ப்ரபோ ! உடனே அவ்விடம் யாதென்று சொல்லுக ! செல்வதற்கு அடியேன் சித்தமாயிருக்கிறேன் என்றான்..
அசரீரியும் சற்றே மௌனமாயிருந்து , பின்பு இன்னமும் உரத்த குரலினால் ” ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல் ” ” ஸ்ரீ ஹஸ்திகிரியே ” உனக்குப் புகல் ; அங்கு வேள்வி செய் என்றது !
பிரமன் ஆனந்தமடைந்தவனாய் , உடனே தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினான் !
ஒரு முறை சொல்லிப் பார்த்தான்
” ஸத்யவ்ரத க்ஷேத்ரம் – ஸ்ரீ ஹஸ்திகிரி ”
சொன்னதும் அவனுக்கு அது ” தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகத் தித்தித்தது ”
நாமும் ஸத்யவ்ரத க்ஷேத்ரம் – ஸ்ரீ ஹஸ்திகிரி என்று சொல்லிக் கொண்டே காத்திருப்போம் !
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி
குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!
With his Thiruttagappanaar (in the framed photo )