வந்தே தேவம் விபுஜவினுதம்! வேத வேத்யம் தயாளும்!! விக்னத்வாந்தம் ப்ரசமனரவிம் ! விச்வவந்த்யம் பிரசன்னம் !! வேதண்டாஸ்யம் விதலிதரிபும் ! வாமதேவாரக்ய ஸூநும் !! வித்யா நாதம் விமலயசஸம் ! வாஞ்சிதார்த்த பிரதந்ததம்!!
பகவான் உலகத்தை பல சமயங்களில் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளார். அப்படி காப்பாற்றவேண்டிய சந்தர்ப்பங்களில் பகவான் பல ரூபங்களை எடுத்துக் கொண்டார். ராமன், கிருஷ்ணன், நரசிம்மன் போன்ற உருவங்களில் கணபதி என்பதுவும் ஒன்று. பகவான் கணேசனாக அவதரித்து கஜாசூரசம்காரம் செய்து உலகத்தை காப்பாற்றினார்.
இந்த கணபதி என்கிற ரூபத்தை ஆராதித்தால் சகல விக்கினங்களும் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. மனிதனுக்கு ஒவ்வொரு காரியத்திலும் விக்னங்கள் உண்டாவது சகஜம் அந்த விக்னங்கள் நீங்க வேண்டியிருந்தால் கணபதியின் க்ருபை மிகவும் அவசியம்.
கணபதியை பூஜித்தால் விக்ன நிவாரணத்தோடு இஷ்டார்த்தங்களும் நிறைவேறும். எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் முன்னால் கணபதி பூஜை செய்து பிறகு அந்த காரியத்தை செய்வது அநாதி காலமாக வருகின்ற சம்பிரதாயம்.
படிக்கும் மாணவர்களும் வேலை செய்பவர்களும் எல்லோரும் கணபதியை ஸ்மரணம் செய்து தான் தங்களுடைய உத்தேசத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். கணபதி பூஜை செய்வதற்கு எல்லா சமயங்களிலும் தகுந்தது ஆனாலும் பிள்ளையார் சதுர்த்தி அன்று கணபதி பூஜை மிக விசேஷமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கணபதி விரதத்தை செய்து கணபதியின் கிருபைக்கு பாத்திரமாகிறவர்களுக்கு எல்லா வித நன்மையும் உண்டாகும். ஆதிசங்கரர் போன்ற மகான்கள் கணபதியை விசேஷமாக ஸ்தோத்திரம் செய்துள்ளார்கள். அந்த ஸ்தோதிரத்தை கணபதியின் சந்நிதியில் சொல்லி கணபதியை வணங்கினால் மிகவும் க்ஷேமம் உண்டாகும். ஆகையால் எல்லோரும் மகா கணபதியை மிக பக்தியுடனும் சிரத்தையுடனும் ஆராதித்து ஸ்ரேயஸை அடையட்டும் என்று ஆசீர்வதித்து அருளுரை வழங்குகிறார்கள் ஸ்ரீ மகாசன்னிதானம் பாரதீ தீர்த்த சுவாமிகள்.