நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி மருத்துவரை அணுகி தனது கஷ்டங்களை சொன்னான். அதைக் கேட்ட மருத்துவர் கவலைப்படாதே உனக்கு வேண்டிய சரியான மருந்து என்னிடம் உள்ளது. இதே நோயால் நீண்ட நாட்களாக நானும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த மருந்தையும் நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறேன். அதனால் எனக்கு அதிகமான பயன் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இப்பொழுது நீ வந்து வந்திருப்பதால் மருந்தின் வீரியத்தை சோதித்துப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உனது நோயை குணப்படுத்தி விடும் என்றே நான் கருதுகிறேன் என்று கூறினார்.
இப்படிப்பட்ட மருத்துவரிடம் நோயாளிக்கு எப்படி நம்பிக்கை வரும்? அதேபோல் நாம் கற்றுக் கொடுக்கும் பாடத்தில் தமக்கே உறுதியான நம்பிக்கை இல்லாத ஒரு ஆசிரியரால் மாணவர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது. அதை நன்கு விளக்கிக் கூறவும் முடியாது. ஒரு தந்தை தன் மகன் பழமைவாய்ந்த பெரிய பண்டிதராகி பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். அவனை காசியிலுள்ள வேத பாடசாலையில் சேர்த்தார். பையனுக்கு வேதாந்தத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் கடனுக்காக பாடசாலைக்கு போய்க் கொண்டிருந்தான்.
புத்திசாலித்தனம் மற்றும் கடினமான உழைப்பும் அவனிடத்தில் இல்லாததால் வேதத்தில் மிக சொற்பமான ஞானத்தை தான் அவனால் கற்றுக் கொள்ள முடிந்தது. சில வருடங்கள் கழித்து பாதியிலேயே தன் படிப்பை முடித்துக்கொண்டு தென்னிந்தியாவில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டான். தனது பாடங்களை தான் வெற்றிகரமாக படித்து முடித்து விட்டதாக அவன் எல்லோரிடமும் பெருமையாக கூறிக் கொண்டான். பிரபலமான பெரிய பணக்காரனின் மகனாய் அவன் இருந்ததால் அவனை எல்லோரும் வேதாந்த பண்டிதர் என்று நினைத்தது மட்டுமின்றி அவ்வூரில் இருந்த பலர் அவனுக்கு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கவும் தயாராக இருந்தார்கள். விரைவில் அவனுக்கு திருமணமும் நடந்து முடிந்தது. தன்னை ஒரு ஆசிரியராக அவன் பிரகடனப்படுத்திக் கொண்டான். பாடம் கற்க வருபவர் பிரம்மச்சாரியா கிரகஸ்த்தரா என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னை நாடி யார் வந்தாலும் அவர்களை உடனே மாணவர்களை சேர்த்துக் கொண்டு விடுவான். சோம்பேறியாய் இருந்ததாலும் வகுப்புகளுக்குச் செல்லும் முன் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை.
அவன் பாடங்களை கற்றுத்தரும் விதமே மிக வினோதமாக இருந்தது. புத்தகத்தில் இருந்து சில வரிகளை தானோ அல்லது ஒரு மாணவனை கொண்டு படித்து கருத்துக்களை அப்படியே வேறு சொற்களால் சொல்வான். அதைப்பற்றி விளக்கம் ஏதும் சொல்லாமல் உடனே அடுத்தவரிக்குத் சென்று விடுவான். இடையிடையே சில நகைச்சுவை களையும் சேர்த்துக் கொள்வான். அவன் கூறிய உதாரணங்கள் சொல்ல வந்த விஷயத்துக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் இருந்தன. தனக்கு பதில் சொல்ல தெரியாத கேள்விகளை மூன்று வழிகளில் அவன் சாமர்த்தியமாக கையாண்டான்.
சில சமயங்களில் இந்த பிரச்சனை ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல இதற்காக நாம் காலத்தை வீண் செய்ய தேவையில்லை. மேலே படித்துக் கொண்டு போ என்று கூறுவான். கேட்கப்பட்ட விஷயம் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்து விட்டால் தனது கைக்கடிகாரத்தை பார்த்துக்கொள்வான் இன்னும் சில நிமிடங்களில் வகுப்பு முடிவு செய்ய வேண்டி இருப்பதால் இதைப் பற்றி பேச நமக்கு அவகாசம் இல்லை. பிறகு பார்ப்போம் என்று சமாளித்து விடுவான். ஒருவேளை அவகாசம் இருந்து விட்டாலோ சற்றும் கவலைப்படாமல் இந்த விஷயம் புத்தகத்திலே பின்வரும் பகுதியில் விளக்கமாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பின்னர் பார்க்கப்போகிறோம். ஆகையால் அதைப் பற்றி இப்பொழுது கவலைப்பட வேண்டாம் என்று கூறி விடுவான். அவனுக்கு கிடைத்த 6 மாணவர்களும் அவனிடத்தில் மிகவும் விசுவாசமாக இருந்தது அவனுடைய அதிர்ஷ்டம். இவரை விட்டு விட்டால் தாங்கள் வேதாந்த பண்டிதராக வேறு எவரும் கிடைக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தங்களுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பை அவர்கள் அறியவில்லை.
பளபளப்பான காவிநிற வேட்டியையும் சட்டையையும் அணிந்து கொண்டு பெரிய தாடியோடு ஒரு இளைஞன் அந்த ஊருக்கு வந்தான். அவ்வூர் மக்கள் அவனை விசாரித்தபோது இமயமலையிலிருந்து ஏழு வருடங்கள் நிஷ்டையில் இருந்து தவம் புரிந்து விட்டு வருவதாக அவன் கூறினான். தன்னுடைய குரு எங்கும் நிறைந்திருக்கும் ஒரு தேவலோக தவசி என்றும் சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று ஒரு நாள் அவர் தன் எதிரில் தோன்றி மக்கள் அமைதியை பெறவும் தங்கள் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளவும் பிறவித் தளையிலிருந்து விரைவில் விடுதலை பெறவும் சுலபமான வழியைக் கூறி அருளினார் என்றும் இல்லாத குருவைப் பற்றி ஏதேதோ சொல்லி வைத்தான். தன் உடலில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களை தொட்டு ஒரு ஞானியாக மாற்றி விட்டார் என்றும் அதனால் தனக்கு பல விசேஷ சக்திகள் வந்து விட்டதாகவும் கூறினான். இங்கே ஏழு வருடங்கள் இந்த இடத்தில் அமர்ந்து தவம் செய். பின்னர் பல்வேறு இடங்களுக்குச் சென்று நான் உனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் சக்தி வாய்ந்த வழிமுறைகளை எல்லா மக்களுக்கும் கற்றுக் கொடு என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் என்றான்.
அவனுடைய வர்ணனையை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவர் குருவை சந்திப்பதற்கு முன் அவனுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று கேட்டார் அதற்கு அவன் அது முடிந்துபோன கதை இந்த புதிய ஆன்மீக வாழ்க்கைக்கு வந்த பிறகு நான் அந்த பழைய வாழ்க்கை பற்றி சொல்லக்கூடாது. சொல்லவும் மாட்டேன் என்று பதிலளித்தான். அவனது வசீகரமான பேச்சு கேட்டு மயங்கிய ஒரு பெரிய தனவந்தன் தன் மாளிகையில் இருந்த சில அறைகளைர அவனுக்கு தேவைக்காக வழங்கினார். அன்று மாலையே அங்கு வந்திருந்த ஒரு மிக கண்ணியமான சிறு கூட்டத்திற்கு அவன் சொற்பொழிவை ஆற்றினான். நல்ல பேச்சாற்றல் கொண்ட அவன் அங்கு வந்திருந்த அனைவரையும் தன் பேச்சால் கவர்ந்தான். அவன் தனது உரையில் மன அமைதியை பெறுவதற்கும் மற்றும் ஞானத்தை அடைவதற்கு உலகத்தை அல்லது ஆசைகளைத் துறக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை முழு நம்பிக்கையுடன் என்னிடம் வருபவர்களுக்கு உபதேசம் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என் குருவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட இப்புதிய வடிவமானது மட்டுமல்ல விரைவில் பயனளிக்கக் கூடிய சிறந்த முறை என்று கூறினான்.
அவன் தன்னுடைய சிஷ்யர்களுக்கு ஓர் ஓரசைச்சொல் மந்திரத்தை உபதேசித்தான். பின்னர் ஒவ்வொரு மூச்சையும் வெளியிடுவதற்கு ஏற்ப அவர்கள் கழுதையைப் போல ஐந்து நிமிடங்களுக்கு கனைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அதன் பிறகுதான் உபதேசித்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எவ்வளவு வேகமாக மூச்சை உள்வாங்கி வெளியில் விட முடியுமோ அவ்வளவு வேகமாக சுவாசிக்க வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். இப்படி சிறிது நேரம் ஜபித்ததும் அவர்களுடைய மனச்சுமைகள் எல்லாம் நீங்கி மனம் லேசாகி விடும் என்று நம்பிக்கை அளித்தான். அதன்பின் அவர்கள் மந்திரத்தை நிறுத்திவிட்டு சாதாரணமாக சுவாசிக்க தொடங்கலாம். அப்பொழுது அவர்களுக்கு ஏற்படும் வினோதமான ஆனந்தத்தை அது மறையும் வரை அவர்கள் அனுபவிக்கலாம். இவற்றையெல்லாம் ஒரு இருட்டு அறையில் தான் பழக வேண்டும் என்று நிபந்தனை அளித்தான். சிஷ்யர்களுக்கு அவன் மந்திரத்தை உபதேசித்து அதற்கு முன் நீங்கள் இதுவரை செய்த எல்லா பாவங்களையும் என்னிடம் கூறுங்கள். நான் என்னுடைய ஆத்ம சக்தியால் உங்கள் பலவீனங்களில் இருந்தும் மற்றும் தவறுகளில் இருந்தும் விடுவித்து விடுகிறேன். ஒரே ஒரு தடவை நான் அப்படி செய்துவிட்டால் நீங்கள் உங்கள் பழக்கங்களை மாற்றிக் கொண்டாலும் அல்லது மாற்றிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்களுக்கு எந்தவித பாதகமும் இல்லை என்றான். சிஷ்யன் தான் செய்த பாவங்களை எல்லாம் அவனிடத்தில் கூறி முடித்ததும் அவன் தனது வலது கையை அவனுடைய மார்பில் வைத்து பாவங்களிலிருந்து உன்னை நான் விடுவிக்கிறேன் என்று மூன்று முறை உச்சரித்தான். அதன்பிறகு சிஷ்யனை இருட்டறையில் கண்களை மூடிக் கொண்டு அசையாமல் உட்கார்ந்து இருக்கும்படி சொல்லிவிட்டு யாருக்கும் எதுவும் புரியாத வண்ணம் சில சடங்குகளைச் செய்து கடைசியில் உபதேசம் கொடுத்தான்.
மந்திர உபதேசத்திற்கு பிறகு ஒவ்வொரு சிஷ்யனுக்கும் அவன் தன்னுடைய படத்தை சட்டம் போட்டு கொடுத்ததோடு வெறும் கைகளால் குங்குமத்தையும் வரவழைத்துக் கொடுத்தான். ஒருவருக்கு உபதேசிக்கும் மந்திரத்தையோ அல்லது தியானம் செய்யும் வழி முறைகளையும் எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டான். இதை மீறி ரகசியத்தை வெளியே கூறுபவர்களுக்கு எந்த பலனும் ஏற்படாது என்றும் அவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் கடும் காய்ச்சல் ஏற்படும் என்றும் கூறினான்.
உபதேசிக்கும் சமயத்தில் ஒவ்வொரு சிஷ்யனுக்கும் ஒரு துடிக்கும் உணர்ச்சி ஏற்பட்டது. சிலருக்கு வித்தியாசமான அனுபவங்கள் பல ஏற்பட்டன. இதனால் எல்லோரும் வியப்பில் மகிழ்ச்சி அடைந்தார்கள். தியானம் செய்யும்போது அசாதாரணமான உணர்வுகள் சிஷ்யர்களுக்கு உண்டாகின. சில அபூர்வமான காட்சிகளை பார்த்ததாகக் கூறி பரவசம் அடைந்தார்கள். உபதேசம் பெற்றுக் கொண்ட ஓரிரு நாட்களில் அவன் கொடுத்த படத்தின் மீது ஒரு வெள்ளை நிற பொடி தானாகவே உருவாவதை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அவனுடைய புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து சிஷ்யர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது.
இதனால் அவன் அடிக்கடி நீண்ட சுற்றுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பணக்கார சிஷ்யர்கள் பலர் பெரிய நன்கொடைகளையும் மற்றும் நவீன விலை உயர்ந்த பொருட்களையும் அவனுக்கு கொடுத்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். பரிதாபத்திற்குரிய அந்த சிஷ்யர்கள் கடைசி வரையில் தாங்கள் புதிதாக எதையும் அடையவில்லை என்பதையும் இருப்பதை இழந்து கொண்டிருப்பதையும் உணரவே இல்லை.
அவனது வலது உள்ளங்கையில் அவனது கை தந்திரத்தால் குங்குமத்தை வரவழைத்தான் என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுடைய படத்தில் இருந்து சிறிது சிறிதாக வெள்ளை நிற உருவானதற்கு காரணம் அவன் அதற்குப் பொருத்தமான ரசாயன பொருட்களை படத்தின் பின்பகுதியில் ஏற்கனவே தடவி வைத்திருந்து ஆகும். சிஷ்யர்கள் வேகமாக சுவாசிக்க வைத்தால் ஏற்பட்ட காரணத்தினால் தான் தியானம் செய்யும்போது அவர்கள் வினோதமான அனுபவங்களை பெற்றார்கள். தகுந்த ஒரு உபகரணம் மூலமாக குறைந்த மின்சாரத்தை அவன் சிஷ்யர்களின் உடம்பில் செலுத்தியதால் அவர்களின் உடம்பில் உள்ள ரோமங்களை பக்குவமாக கையாண்டதால் அவர்களுக்கு உள்ளம் சிலிர்க்கச் செய்யும் அனுபவங்கள் பல ஏற்பட்டன.
சிஷ்யன் கண்களை மூடிக்கொண்டு அதுவும் அமைதியான இருட்டறையில் முழு நம்பிக்கையுடன் உட்கார்ந்திருந்ததால் ஒரு குருவின் ஏமாற்று வேலைகளை அவன் சந்தேகிக்க அல்லது கண்டுபிடிக்கவில்லை. நம்பிக்கையின் உன்னத சக்தியையும் எதிர்பார்ப்புகள் உண்டாகும் சில மனோபாவங்களையும் தனக்குத் தானே வைத்துக் கொள்வதில் பயன்களையும் மற்றும் மனோவசிய முறையில் அடுத்தவரின் உள் மனதோடு பேசும் ஆற்றலையும் நன்கு கற்று வைத்திருந்ததால் அந்த குரு அவற்றை முழுவதும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான். மற்றவர்களை வசீகரித்து அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காக மனோதத்துவ நிபுணர்கள் சீரான குரலில் சில கட்டளைகளை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருப்பார்கள். அதைப்போல் இது நடக்கும் அது நடக்கும் என்று இவன் கூறும் வார்த்தைகளில் சிஷ்யர்கள் வைக்கும் பூரண நம்பிக்கையோடு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த பெரிய எதிர்பார்ப்புகளும் சேர்ந்து கொண்டதால் மிக எளிதாக அவன் எல்லோரையும் தன் வலையில் விழச் செய்தான். தியானத்தின் போதும் சிஷ்யர்களுக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவங்களுக்கு இவையே காரணங்களாக அமைந்தன. சிஷ்யர்கள் மனம்விட்டு கூறிய பாவங்களை காட்டி அவர்களை பயமுறுத்துவது சீக்கிரம் ஏமாந்து போகக் கூடிய சில பெண்கள் இடத்தில் பாலியல் குற்றங்கள் புரிவது போன்ற தனது செய்கைகளினால் அந்த குருவுக்கு மன உறுத்தல் ஏதும் ஏற்படவில்லை. விசேஷ சக்தி உங்களுக்கு அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்திரீகளோடு உடல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்வான். உபதேச முறைகளை வெளியில் சொல்லக்கூடாது என்று அவன் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவ் எச்சரிக்கைக்கு நிச்சயம் கட்டுபடுவார்கள் என்று அவன் நன்கு அறிந்திருந்தான். இத்தகையவர்களுக்கு சிஷ்யனாக வேதாந்த அறிவு இல்லாமல் பண்டிதர் என்று கூறிக்கொண்ட வரை போன்றவர்கள் இடத்தில் படிப்பதாலும் மக்கள் பெரிய இழப்பிற்கு ஆளாகிறார்கள். துரதிஷ்டவசமாக ஆழ்ந்த அறிவின்றி வேதாந்த பிரச்சாரம் செய்வதையும் தியானம் அடையாத அந்த போலியான ஆசாமிகளும் தங்களை குரு என்று சொல்லிக் கொள்வது இந்த சமுதாயத்தில் சர்வசாதாரணமாகக் காணலாம்.
சிஷ்யர்களின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்கு ஏராளமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் ஆனால் சிஷ்யர்களின் துன்பங்களை எடுத்துக் கொள்ள வரும் ஆச்சாரியார்கள் பார்ப்பது மிகவும் அரிது. ஆசான்கள் களங்கப் பட்டவர்களாக இருந்தாலும் எது சரி எது தவறு என சிந்தித்துப் பார்க்காமல் செயல்படுபவர்களாக இருந்தாலும் தவறான பாதையில் செல்வதாக இருந்தாலும் அவர்களை கைவிட வேண்டும் என்று சாஸ்திரத்தில் அறிவுறுத்துகின்றன.
ஆதிசங்கர பகவத்பாதர் சத்குருவைப் பற்றி சொல்லும் பொழுது தாம் உண்மையை உணர்ந்தவராயிருந்து சிஷ்யனின் மேன்மையை என்றும் தன் கருத்தில் கொண்டு உள்ளவர் என்று கூறியுள்ளார். அப்பேர்ப்பட்ட சத்குரு இடத்திலேதான் ஒருவன் தஞ்சம் அடைய வேண்டும். போலி குருவிடம் சென்று சிக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும். நாம் அணுகும் குரு உயர்ந்த குரு பரம்பரையில் வந்துள்ளவராகவும் சாத்திரங்களை நன்கு கற்றவர் ஆகவும் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி கற்பிப்பவராக நமக்குத் தோன்றும் புதிய மார்க்கத்தை பரப்பாதவராகவும் மனதையும் புலன்களையும் தம்முடைய வசத்தில் கொண்டு உள்ளவர்களாகவும் வைராக்கியசாலியாகவும் தூய்மையான நடத்தை உள்ளவர்களாகவும் சிஷ்யனின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவராகவும் மற்றும் சிஷ்யனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதவராகவும் இருத்தல் வேண்டும்.