மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்தசி இதனை சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். சிவனை வழிபடுவதற்கு உகந்த இரவு அதனால் மங்களம் தரும். கார்த்திகை மாதத்தின் இறுதியில் உள்ள எட்டு நாட்களும் மார்கழி மாதத்தில் உள்ள எட்டு நாட்களும் எமனின் தெற்றுப்பல் எனப்படும்( யமதம்ஷ்ட்ரா) இரவுகள் கொண்டவை இவற்றை காலராத்திரி என்று அழைக்கிறோம். பெரும்பாலும் மரண பயம் இந்த நாட்களில் கூடுதலாய் இருக்கும்
காலராத்திரி அந்த இரவுகளுக்கு நேர் எதிரான தன்மை படைத்தது சிவராத்திரி. மங்களமான அந்த இரவை உளமாற அனுபவிக்க உபவாசமும் கண்விழிப்பும் இன்றியமையாதது. உபவாசத்தால் மனத்தெளிவும் கண்விழிப்பால் சிதறாமல் ஊன்றிப் பார்க்கும் முனைவும் அதிகப்படும்.
தெய்வீக சூழ்நிலையில் மன அமைதியுடன் தெய்வீக வழிபாட்டில் இரவைக் கழிப்பது சிவராத்திரி ஆகிறது
மனதில் நிறைந்துள்ள கொடூர எண்ணம் கோபவெறி கொண்ட கொடுஞ்செயல் செய்கிற பரபரப்பும் அடங்குவது அன்றிரவின் தனி சிறப்பு இது மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடம் காணப்படும் அற்புதம்.
இதற்கு ஒரு புராணக் கதை. ஒரு வேடன். ஜீவ ஹிம்சை அவனது ரத்தத்தில் ஊறியிருந்தது. மாமிச வியாபாரிகளிடம் பணம் வாங்கி அவைகளுக்கு ஈடான மாமிசம் தராததால் காட்டில் இருந்த பாழடைந்த சிவன் கோவிலில் வியாபாரிகள் அவனை சிறையில் இட்டார்கள். அன்று சிவராத்திரி பகல் முழுவதும் சிறையில் இருந்த வேடன் மறுநாள் மாலையில் விடுவிக்கப்பட்டான். சிறையில் இருந்தபோது அவனைச் சுற்றியிருந்த வியாபாரிகள் அந்த நாளின் சிறப்பையும் சிவநாமஜபத்தின் மகிமையையும் பெருமையையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். வேடனும் அதனைக் கேட்டான்.
சிறை மீண்ட வேடன் கோவிலைச் சுற்றியிருந்த வேலியில் மறைந்திருந்தான். இரவு தொடங்கியது மிருகம் ஒன்றும் வரவில்லை. பொழுதை கழிப்பது சிரமமாயிருந்தது. அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்தான் சோம்பலை தவிர்க்க இலையைப் பறித்துக் கீழே போட்டான். அவன் அமர்ந்திருந்தது வில்வ மரத்தின்மேல். அந்த இலையை பறித்து தூவியது வில்வ மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது. வேடன் இவை எதனையும் கவனிக்கவில்லை.
அப்பொழுது நிறைமாதகர்ப்பிணியான ஒரு பெண் மான் அங்கு வந்தது. வேடனின் கை பரபரத்தது. வேடன் தன்னை கொல்ல முனைவது தெரிந்ததும் வேடனைப் பார்த்து மான் என்னை ஏன் கொல்ல நினைக்கிறாய் என்று கேட்டது. குடும்பம் அனைத்தும் பட்டினி கடன் தீர்க்க காசு இல்லை என்றான் வேடன்.
கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு அவனிடம் அமைதி காணப்பட்டது. சிவராத்திரி என்ற புண்ணிய நாளில் உபவாசம் கண்விழிப்பும் வில்வ இலையை சிவபெருமான் மீது தூவியதின் காரணமாக கொடூரமும் பரபரப்பும் அவனிடம் குறைந்திருந்தன.
மானே உன்னை கண்டவுடன் கொல்லாமல் நீ கேள்வி கேட்டு நான் பதில் கூற முற்படுவது விந்தையானது நீ யார் என்று கேட்டான்.
வேடனே நான் முன் ஜென்மத்தில் அப்சரஸ் எனது காதலன் ஒர் அசுரன் அவனுடன் சந்தோஷமாக இருந்த நான் சிவ வழிபாட்டில் நர்த்தனம் புரிய நியமிக்கப்பட்டிருந்ததை மறந்தேன். சிற்றின்பத்தை நாடும் ஒரு பெண்மானாகும்படி சாபம் ஏற்பட்டது.
சிவபெருமானிடம் சாபத்தில் இருந்து மீள வழி கேட்டபோது உன் கணவனான அசுரனும் மான் ஆவான் அவனுடன் கூடி கருத்தரிக்கும் போது எனது நன்னாளில் உன்னை ஒரு வேடன் கொல்ல முற்படுவான் அப்போது உன் முற்பிறவி நினைவு வரும் சாபத்திலிருந்து நீ மீள்வாய் என்றார். இதுதான் உன்னோடு பேச முற்பட்டதற்கு காரணம் நானோ பூரண கர்ப்பிணி. பெண் மாமிசம் உண்ண ஏற்றது இல்லை நான் இன்றோ நாளையோ குட்டியை ஈன்று என் கூட்டத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு உடலை தேற்றிக்கொண்டு உன் இருப்பிடம் வருவேன் நீ என்னை கொன்று உணவாக்கலாம் என்றது .
எப்படி உன்னை நம்புவது நீ இந்த காட்டில் உள்ள தேவதைகள் சாட்சியாக உறுதி அளித்து செல் என்றான் வேடன்.
மானும் அப்படியே செய்தது.
வேடன் தெய்வத்தின் மீது உறுதிமொழி தருவதை நம்புவானா? சிவராத்திரியால் ஏற்பட்ட மன மாற்றம் இது. தெய்வ சாட்சியாக உறுதி கூறிய மானை வேடன் வெளியேற அனுமதித்தான்.
மனசஞ்சலம் அடங்கி நேரத்தை கடத்த வில்வ மரத்தின் மீது ஏறி மீண்டும் இலையைப் பறித்து போட்டான். அவனது நீர் குடுவையிலிருந்து அவ்வப்பொழுது நீ சிதறியது அவன் பறித்துப் போட்ட வில்வ இலையும் நீரும் சிவலிங்கத்தின்மீது விழுந்தன. வேலியில் மறைந்து மீண்டும் ஓடையை உற்று நோக்கிய வேடனின் கண்களுக்கு மற்றொரு பெண் மான் தென்பட்டது. வில்லில் அம்மைத் தொடுக்கும் பரபரப்பில் இருந்த வேடனை கண்ட திகிலடைந்தது மான்.முன் வந்த மானை போலவே அதுவும் வேடனை தஞ்சமடைந்தது. தனக்கு ஒரு கடமை இருப்பதாகவும் அதை நிறைவேற்றி விட்டு கட்டாயம் திரும்பி வருவதாகவும் உரைத்தது. அதன்படி அந்த மானும் விடுபட்டது.
வேடனிடம் சிக்கிய மான் உயிரோடு மீள்வதா? வேடனின் மனம் சிறிது சிறிதாக சிவராத்திரியின் மகிமையால் கொடும் எண்ணங்களை செயலாக்க இயலாத நிலைக்கு வந்துவிட்டது. அவனது வாய் அவனை அறியாமலேயே சிவன் நாமத்தை முணுமுணுக்க தொடங்கியது கை வில்வம் பறிக்க சென்றது இரவின் மூன்றாம் யாமமும் கழிந்தது.
அப்போது ஒரு கொழுத்த ஆண்மான் ஓடிவந்தது. முன் சென்ற பெண் மானின் இணை அது. வில்லேந்தி நின்ற வேடனைப் பார்த்து இவன் என் மனைவியை கொன்று இருப்பான் என்று ஐயப்பட்ட மான் வேடனை உற்றுப் பார்த்து கேட்டது. வேடனே முன்வந்த இரு பெண்மான்களையும் கொன்று விட்டாயா?
வேடனுக்கு முதல் பெண் மான் கூறிய அரக்கன் இவன் தானோ என்ற ஐயம் எழுந்தது மானே அவை இரண்டும் உயிருடன் திரும்பி விட்டன நீயே என் குடும்பத்திற்கு உணவாய் என்றான் வேடன்.
எனக்கும் ஒரு கடமை இருக்கிறது என் மனைவியை பார்த்து விட்டு காலை வருகிறேன் என்று உறுதி குறி இந்த மானும் சென்றுவிட்டது.
இதையும் அந்த வேடன் செல்ல அனுமதி தான் அவனுக்கு வியப்பு ஏற்பட்டது கை வில்வம் பறித்தது வாய் சிவசிவ என்றது மனம் ஆனந்தமாக இருந்தது.
அதற்குள் குட்டிகளுடன் ஒரு பெண்மான் வந்தது. வேடனிடம் தன் குட்டிகளை தக்க பாதுகாப்புடன் சேர்த்துவிட்டு வருவதாக உறுதி கூறி காட்டிற்குள் மறைந்தது.
பொழுது விடிந்தது தன் மறைவிடத்திற்கு வந்து அமர்ந்தான் அன்று நடந்ததை நினைத்து அவன் வியப்புற்றான். வில்லும் அம்பும் இருந்தும் மான் வேட்டை எளிதில் நிறைவேறும் வாய்ப்பு இருந்தும் தானே விரும்பி விடுவித்தது எதனால் என்பது அவனுக்குப் புரியவில்லை.
மூன்று பெண் மான்களும் ஆண் மானிடம் வந்தன. சொன்ன சொல் காப்பாற்ற தீர்மானித்தன. வேடன் இருக்கும் இடத்திற்கு வந்த தம்மை ஒப்படைத்தன.
மான்களிடமும் சிவராத்திரி இந்த மனத்திட்பத்தைத் தந்தது. வேடன் திகைத்தான் அம்பையும் வில்லையும் எறிந்தான். அணைத்து தடவிக்கொடுத்து காட்டிற்குச் செல்ல விடை அளித்தான். அவனது மனமும் வாயும் இணைந்து சிவசிவா என்றது.
அப்போது அவனுக்கும் மான்களுக்கும் சிவ பெருமான் காட்சியளித்தார். கதை இவ்வளவுதான். அந்த இரவு வேளை மங்களகரமானது அனிச்சையாக செய்கிற நற்செயல் கூட பல மடங்கு அதிகப் பயன் தருகிறது. வேளையின் பெருமை இது. கொடிய மனமும் பரிவால் இளகுகிறது.
எல்லா உயிரினத்திலும் அன்பு பெருகி தெய்வீக சூழ்நிலை நிலவுகிறது. சிவபக்தியில் ஒரு சிவ சிந்தனையுடன் மனமாற சிவனை வழிபட்டு கிடைக்கின்ற அருள் அத்தகையதாக இருக்கும்.