வெளிநாட்டவர்: இந்துக்கள் பல தெய்வங்களை பூஜிப்பது உண்டா?
ஆச்சாரியாள்: அனைத்து படைப்பின் ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய வற்றிற்கு காரணமான உருவமற்ற ஒரே இறைவன் தான் இருக்கிறான் என்று நாம் கருதுகிறோம். ஆனால் இந்த இறைவன் தன்னுடைய பக்தர்களை அறிவதற்காக பலவிதமான உருவங்களை பெற்றுக் கொள்கிறான். எந்த பெயருடனும் உருவத்துடனும் மக்கள் இறைவனை விரும்புகிறார்களோ அவ்வகையில் அவர்கள் அவனை ஆராதிக்கிறார்கள். இந்திரன் போன்ற பெயர்களை நீங்கள் கேட்டிருக்கலாம். இவைகள் புண்ணியம் செய்த ஜீவன் வெவ்வேறு சமயங்களில் அடையும் பதவிகள். முன்பு கூறப்பட்ட இறைவனுடன் இது போன்ற பதவிகளையும் சேர்த்து நாம் குழப்பக்கூடாது.
வெளிநாட்டவர்: சிலைகளை பூஜிப்பது பற்றி ஆச்சார்யாள் சற்றுக் கூறுவார்களா?
ஆச்சாரியாள்: நாம் வெறும் கற்களை பூஜிப்பது இல்லை. வெறும் கல்லை நாம் பூஜிப்பதாக இருந்தால் உருவத்தைப் பார்த்து கல்லே என்று கூறுவோம். இறைவா என்று இல்லை. மூர்த்திகளில் இறைவன் இருக்கிறான் என்று கருதி மூர்த்திகளை நம் ஆராதனைக்குத் துணையாக வைத்துக்கொண்டு இறைவனை பூஜிக்கிறோம். மூர்த்திகளை பிரதிஷ்டை செய்வதற்காக செய்யும் கும்பாபிஷேகத்தில் பூஜை செய்பவர்களின் சிரத்தையாலும் தவத்தாலும் சில மூர்த்திகளின் விசேஷத்தால் கோவில்களில் இருக்கும் மூர்த்திகளில் விசேஷமாக தெய்வ ஸாந்நித்யம் ஏற்படுகிறது. இறைவன் உருவமற்றவன் ஆனாலும் தன் கருணையால் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்கு சக்தி உள்ளவனாகவும் இருக்கிறான். அவ்வாறு செய்யவும் செய்கிறான்.
வெளிநாட்டவர்:
பூஜை செய்யும் போது நீர் பால் போன்றவைகளை ஊற்றுவதை பார்த்தேன் அதன் தாத்பரியம் என்ன?
ஆச்சார்யாள்: பூஜை செய்யும் போது இறைவனை நாம் ஸேவிக்கிறோம். நீங்கள் கண்ட அபிஷேகம் மூலமாக நாம் இறைவனை குளிப்பாட்டுகிறோம். அதற்குப் பிறகு அவனைத் துடைக்கிறோம். பிறகு அவனை உணவு அருந்த செய்கிறோம். அளவற்ற உருவமற்ற இறைவனுக்கு எதுவும் தேவைப்படாவிட்டாலும் நம் பக்தி நாம் அவனை மூர்த்தி கண்டு பூஜிக்கும்படிச் செய்கிறது. உங்களுக்குப் பழக்கம் உள்ள ஒப்புமை கூற வேண்டுமானால் அபிஷேகம் என்பது இறைவனுக்கு நாம் கொடுக்கும் ஷவர் பாத்.