சிஷ்யர்: காலத்தின் போக்கினால் சாத்திரங்களின் சொற்படி நடப்பது தற்போது கடினமாக இருக்கிறது. காலங்களுக்கு ஏற்ப சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவைக்கும் சற்று மாறுதல் உண்டாக்க முடியுமா?
ஆச்சார்யாள்: இலட்சியத்தை என்றுமே குறைக்கக்கூடாது. பல மக்கள் லஞ்சம் வாங்குவதை பார்க்கிறோமே இதற்காக லஞ்சம் வாங்குவது சரி என்று சட்டமியற்றி விட முடியுமா? இப்படி நாம் செய்தால் இப்போது இருக்கும் லஞ்சத்தை காட்டிலும் பின்னால் அது அதிகமாகிவிடும். அதேபோல் சாஸ்த்திரங்கள் விஷயத்திலும் மாறுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க கூடாது சாஸ்த்திரங்கள் காலங்களின் தன்மையைப் பொருத்து இருக்கின்றன. அதனால் தான் அவைகளில் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்குச் செய் என்றிருக்கிறது. ஆதலால் நாம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் நமக்கு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணபயமாத்மா,
‘ஸ்வல்மப்யஸ்ய தர்மஸ்ய த்ரயாதே மஹதோ பயாத்’
(இந்த தர்மத்தை சிறிது பயிற்சி செய்தாலும் அது பெரும் பயத்திலிருந்து காப்பாற்றும்) என்று கூறியிருக்கிறார்.
ஆகவே சாஸ்திரங்களையே மாற்ற வேண்டும் என்று கூறுவது எவ்வாறு சரியாகும்?
மேலும் இக்காலத்தில் கூட சந்தியாவந்தனம் செய்ய முடியாது என்று யாரும் கூற முடியாது இதைத்தவிர சாஸ்திரங்களை மாற்ற வேண்டுமென்றால் நடந்தது நடப்பது நடக்கப்போவது இவை மூன்றைப் பற்றியும் ஒருவனுக்கு தெரிந்திருக்கவேண்டும். கர்மா எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் இருந்தால் எப்படி நாம் சாஸ்திரங்களின் கட்டளைகளை மாற்ற முடியும்?
மேலும் ஒரு காரியத்தை இப்போது கஷ்டம் ஆனாலும் செய் பின்னால் நல்ல பலன் அடைவாய் என்று எவ்வாறு கூறமுடியும்? அடுத்த பிறவியில் நடக்கப் போவது என்ன என்பது நமக்குத் தெரியாது முற்பிறவியில் நடந்ததும் தெரியாது ஆதலால் முக்காலமும் தெரிந்தவன் ஸர்வக்ஞன்தான் இது சரி இது தவறு எனக் கூறமுடியும். நமக்கு அதுபோல அறிவு இல்லாததால் சாஸ்திரங்களை மாற்றுவதற்கு நமக்கு தகுதி இல்லை.
சிஷ்யர்: பல இடங்களில் யாகங்கள் நடைபெறுகின்றன யாகங்களுக்கு அதிகமாக பணம் செலவழிகிறது. இப்பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து இருந்தால் அவர்கள் நன்மை அடைந்து இருப்பார்கள் என்று சிலர் யாகத்தைப் பற்றி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இது சரியா?
ஆச்சாரியாள்: யாகத்தின் மேல் நாம் செலவழிப்பது ஜனங்கள் லௌகீகப் பொருட்கள் மேல் செலவழிப்பதில் ஒரு சிறு பகுதி கூட ஆகாது. சிறிதளவு நெய் யாகத்தில் விடுகிறோம். இதற்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்? யாகத்தின் மூலம் இறைவன் திருப்தியுற்று அவன் கிருபையால் நாம் செலவிட்ட பொருட்களை காட்டிலும் அதிக பலன் கிடைக்கும் உதாரணமாக இறைவன் யாகத்தினால் திருப்தி அடைந்து தக்க காலங்களில் சரியான அளவு மழை போன்றவற்றை தருகிறான். ஆதலால் யாகத்தை வீண்செலவு என்று கூற முடியாது.
விதைகளை நாம் நிலத்தில் இட்டால் பின் நல்ல விளைச்சல் கிடைக்கும் இதை விடுத்து விதைகளை வீணாகிப் போடுகிறோமே அப்படியே சாப்பிடலாமே என்று கூறுவது பொருந்துமா? விதைகளை வயலில் இட்டால் தான் தானியங்கள் கிடைக்கும் அதே போல் யாகத்திற்காக சிறிது நாம் கஷ்டப்பட்டாலும் உத்தமமான பலன் கிடைக்கும். சாஸ்த்திரங்களும் எந்த அளவிற்கு ஒருவனுக்கு சாமர்த்தியம் உண்டோ அவ்வளவிற்கு ஒருவன் யாகத்தை செய்ய வேண்டும் என்று சொல்வதிலிருந்து மிகவும் செலவாகும் ஒரு யாகத்தை ஏழை செய்யுமாறு சாஸ்திரம் கூறவில்லை. ஆதலால் நாம் யாகத்தில் செலவழிப்பது நம் நன்மைக்காகத்தான். அதை வீண் செலவாகக் கருதுவது தவறு.