புகழ்த்துணை நாயனார்:
தஞ்சை மாவட்டம் அழகாப்புத்தூர் இத்தலத்திலே அவதரித்தவர் புகழ்த்துணை நாயனார். இத்தலத்திலே உள்ள அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற சுவர்ணபுரீஸ்வரரை அனுதினமும் துதித்து வணங்குபவர். தினமும் சுவாமிக்கு தீர்த்தம் எடுத்துவந்து அதில் அபிஷேகம் செய்து மலர்கள் சாற்றி வழிபடுவது அவரது வழக்கமாகும்.
ஒருமுறை இவரை சோதிக்க எண்ணிய இறைவன் அவ்வூரில் பஞ்சத்தை உருவாக்கி மழையின்றி செய்தமையால் மக்கள் மிகவும் துன்பபட்டனர். இறைவனை மறந்து அடுத்த வேளை உணவுக்காக அலைந்து திரிந்தனர். குழந்தைகள் பசியால் துடித்து கதறின. இதனை எதையும் பொருட்படுத்தாமல் இறைவனுக்கு தினமும் குடத்தில் நீரெடுத்து அபிஷேகம் செய்வதையே குறிக்கோளாக கொண்டார் நாயனார். அவரை மட்டும் விடுமா பஞ்சம் வயிற்றில் பசி வாட்டியது இருந்தும் இறைபணியை தொடர்ந்தார்.
பசிமிகுதியால் உடல்வலுவற்று சோர்ந்து போனார். பசிப்பிணி வாட்டினாலும் திருத்தொண்டை திறம்பட செய்தார். ஒருநாள் காலை திருக்கோவிலில் பசியினால் மிகவும் களைப்புற்று உடல் தளர்ந்து நடக்க சக்தியற்று குடத்தில் அபிஷேகநீரை ஏந்தி கருவறைக்குள் செல்லுகையில் பசிமயக்கத்தால் குடத்தோடு சாய்ந்தார். இறைவனின் லிங்கத்தின் மேல் தலை மோதி சாய்ந்தார் மயக்கத்தில் இருந்த அவரை இறைவன் உறக்கத்தில் ஆழ்த்தி காயம் ஆற்றி அவர் கனவில் உமையோடு விடைமேல் தோன்றி புகழ்துணையாரே உம் பக்தியால் யாம் மகிழ்ந்தோம் பஞ்சத்தால் மக்கள் பசி பசி என ஓடி எனை வழிபட மறந்தனர். ஆனால் நீயோ பசிவேதனையிலும் என்னை தினமும் அபிஷேகித்து பூஜித்தாய். உன் பக்தியை மெச்சினேன். இக்கோவில் பலிபீடத்தில் தினமும் ஒரு பொற்காசு தருகிறேன். அதை பெற்று ஊர்மக்கள் பசி போக்கி அருள்க என திருவாய் மலர்ந்தார்.
கண்விழித்த நாயனார் இறைவன் கருணையை எண்ணி மகிழ்ந்து பலிபீடம் சென்று பார்க்கையில் ஒரு பொற்காசை இறைவன் வைத்திருந்தார். இதனால் இத்தல இறைவன் படிக்காசு நாதர் ஆனார். புகழ்த்துணையார் இறைவன் கருணையை எண்ணி மகிழ்ந்து ஊரார் பசிபோக்கி பலகாலம் சிவப்பணி புரிந்து இறைவன் பதம் அடைந்தார். அந்த புகழ்த்துணை நாயனாரின் பாதங்களை பணிவோம். கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6கிமீ தூரத்தில் அழகாப்புதூர் எனும் அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற தலம் அமைந்துள்ளது.