வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது.
நம்பாடுவான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். பெரும்பாலும் இவன் பாணர் ஜாதிக்காரனாக இருக்கலாம். இவன் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசியில் அழகிய நம்பியைப் பாடிப் பரவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒருமுறை அழகியநம்பி கோயிலுக்கு நம்பாடுவான் வந்த காட்டுவழியில் பிரம்மராட்சசன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் முற்பிறவியில் பிராமணன். பெரும் பாவம் செய்ததால் பிரம்மராட்சசன் ஆனவன். அவன் நம்பாடுவானைத் தடுத்து நிறுத்தி, “உன் உடலைப் புசிக்கப் போகிறேன்” என்றான். நம்பாடுவானோ, “நான் அழகிய நம்பியைப் பாடி சேவித்து விட்டுத் திரும்பி இதே இடத்திற்கு வருவேன், அப்போது நீ என்னைப் புசித்துக் கொள்ளலாம்” என்கிறான். உடனே ராட்சசனும் நம்பாடுவான் சொன்னதை நம்பி, அவனை அனுப்பிவைக்கிறான்.
நம்பாடுவான் கோயிலில் இரவு முழுக்கப் பாடினான். நம்பியைச் சேவித்தான். பின் ராட்சசனுக்கு வாக்களித்தபடி அவன் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். காட்டுவழியாக நடந்தபோது, விஷ்ணு ஒரு முதியவர் உருவம் தாங்கி வந்தார். ‘வழியில் பிரம்மராட்சசன் ஒருவன் நிற்கிறான். உன்னைப் புசித்துவிடுவான். நீ வேறு வழியில் சென்று தப்பிவிடு’ என்று நம்பாடுவானைப் பார்த்துச் சொன்னார். அவனோ ‘இல்லை, நான் அந்த ராட்சசனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன். அவனிடம் செல்ல வேண்டும். அவனைச் சந்திக்கத்தான் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு நடந்தான்.
நம்பாடுவானைப் பார்த்தபோது, ராட்சசனின் மனநிலை மாறியிருந்தது. நம்பாடுவானைப் புசிக்க அவன் விரும்பவில்லை. அழகிய நம்பியின் முன் பாணன் பாடிய பாடலைப் பாடுமாறு கேட்கிறான். நம்பாடுவானுக்கு அதில் விருப்பமில்லை. அவர்கள் தொடர்ந்து உரையாடுகின்றனர். முடிவில் நம்பாடுவான் ராட்சசனின் பாவம் தீர அருள் வழங்குகிறான்.
இந்தக் கதை நாடகமாக நடந்தபோது, திருவடிவழகிய நம்பியே கண்ணுற்றார் என்பது வைஷ்ணவ சம்பிரதாயம்.