ஆடி அழைத்து வரும், ஆம் பண்டிகை ஆரம்பகாலம், எங்கு பார்த்தாலும் அம்மன்கோவிலில் பூஜைகள் செய்யப்படும்
ஆடி மாதம் அம்பிகைக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் சிறப்பான மாதம்தான். சக்தி என்றாலே பெண்கள்தானே. ஆடி மாதத்தில் பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக அமைந்த சிறப்பான திருநாள்களை இங்கு காண்போம்.
ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் பெண்களுக்கான விரத நாள்கள்தான். இந்த நாளில் செய்யப்படும் விளக்கு பூஜைகள் சிறப்பானது. கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் பெண் தெய்வங்கள், குலதெய்வங்களாக இருக்கும் பெண் சக்திகளை இந்த மாதத்தில் வழிபடுவது சிறப்பானது. ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் பெண்களுக்கே உரித்தான திருநாளாகும்.
ஆடியில் வளர்பிறை நாளில் வரும் வெள்ளி, செவ்வாய்களில் அம்மன் பூஜை செய்தால் சிறப்பான பலன்களை தரும். கோலமிட்டு, குத்து விளக்கேற்றி, பூஜையின்போது ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் அம்மன் பாடல்களைப் பாடி சக்தியை வணங்குவது நல்லது.
பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் போன்றவற்றைப் படைத்து பூஜையை நிறைவு செய்யலாம். அப்போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக அலங்கரித்து உணவளித்து, மங்கலப் பொருள்களை அளித்து அவர்களிடம் ஆசியைப் பெறலாம். இதனால் பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.
இதே மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மணமான பெண்களின் முக்கிய விரத நாள். வரலட்சுமியை வணங்கி வீட்டிற்கு வருமாறு பாடல் பாடுவது இந்த நாளில் வழக்கம். பலவித நைவேத்தியங்கள் படைத்து மற்ற சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு, ரவிக்கைத்துணி, மங்கலப்பொருள்கள் அளித்து அவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம்.
ஆடி மாதத்தின் இறுதியில் வர இருக்கும் ஆடிக் கிருத்திகைத் திருநாளில் முருகப்பெருமானை வணங்கி குடும்ப நலனுக்காக விரதமிருந்து ஆசி பெறுவார்கள்.
தருமபுரி கோட்டை ஸ்ரீகல்யாண காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் சூலினி துர்கையின் திவ்ய ரூபத்தை ஆடிமாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். ஆண்டின் மற்ற எல்லா நாள்களிலும் சூலினியின் முகதரிசனம் மட்டுமே கிடைக்கும் என்பதால் அன்று பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவது நல்லது. இதனால் பயங்கள் நீங்கி செழிப்பு உண்டாகும். ஆனால், எலுமிச்சம் பழ விளக்குகளை ஒருபோதும் வீட்டில் ஏற்றக் கூடாது.
ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி அன்று அரசமரத்தைப் பெண்கள் வலம் வருவது குழந்தைப்பேற்றினை அளிக்கும். அம்மனுக்குச் சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்தால் திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்கும்.