(‘Excuse me’ என்கிறார்கள்.Thanks’ என்கிறார்கள்; ‘Sorry’ என்கிறார்கள். இதெல்லாம் போற்றத்தக்க பண்பாடு. இதை விட்டுவிட்டு,கேவலம் டிரஸ்ஸை மட்டும் copy அடிக்கிறோம்.நமது கலாசாரப்படி டிரஸ் பண்ணிக்கணும். இல்லேன்னா….நாளடைவில் நமது பண்பாடுகளின் அஸ்திவாரமே போயிடும்….”–பெரியவா)
பணக்காரக் குடும்பம்; நவநாகரிகமான குடும்பம். பெண் அமெரிக்காவில் படிக்கிறாள். முழுக்கால் சட்டை,ஆண்களின் மேல் சட்டை அணிந்து கொண்டு மிடுக்காக வந்திருந்தாள்.
பக்கத்திலேயே ஒரு சாமானியக் குடும்பப் பெண்- பாவாடை,சட்டை,தாவணி என்று தென்னாட்டுப் பாரம்பரிய உடை.
பெரியவா அப்போது ஒரு புத்தகத்தைப் படித்து கொண்டிருந்தார்கள். இரு குடும்பத்தினரையும் பார்த்து விட்டு,சற்று நேரம் படித்துவிட்டுப்
புத்தகத்தை மூடி வைத்தார்கள்.
ஏழைப் பெண்ணைப் பார்த்து, ” நீ என்ன பண்றே? இதோ, இந்தப் பெண்ணைப் பாரு….காலேஜில் படிச்சுட்டு அமெரிக்கா போயிருக்கா…நீ என்ன பண்றதா,உத்தேசம்?” என்று கேட்டார்கள்.
“நானும் பி.ஏ.படிச்சிருக்கேன்…”
“அப்புறம்?”
“அப்பா – அம்மா சொல்கிறபடி, சிக்கனமாகக் குடும்பம் நடத்துவேன்.புடவை கட்டிப்பேன்; வேற டிரஸ் போட்டுக்க மாட்டேன்.நமக்குன்னு ஒரு கலாசாரம் இருக்குன்னு அப்பா அடிக்கடி சொல்லுவா..”
பளிச்சென்ற இந்த பதிலில்,பணக்காரப் பெண்ணிடம் ஒரு இன்பகரமான மாறுதல். தடாலென்று பெரியவாள் முன்பாக விழுந்தாள்.
“பெரியவா மன்னிக்கணும்.நான் இந்த டிரஸ்ஸில் இங்கே வந்தது,ஒரு அகங்காரத்தால்தான்.நான் அமெரிக்காவில் இருக்கேன்! என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் உள்மன நோக்கம்…இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்”என்று கெஞ்சுகிறாப்போல் சொன்னாள்.
பெரியவா சொன்னார்கள்;
“மேல்நாட்டுக்காரர்களிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை ஏற்றுக் கொள்ளலாம்.’Excuse me’ என்கிறார்கள் .Thanks’ என்கிறார்கள்; ‘Sorry’ என்கிறார்கள். இதெல்லாம் போற்றத்தக்க பண்பாடு. இதை விட்டு விட்டு,கேவலம் டிரஸ்ஸை மட்டும் copy அடிக்கிறோம்.நமது கலாசாரப்படி டிரஸ் பண்ணிக்கணும். இல்லேன்னா…. நாளடைவில் நமது பண்பாடுகளின் அஸ்திவாரமே போயிடும்….”
இந்த உபதேசம் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல; நம் எல்லோருக்கும் தானே?
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.