எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே ” யஜ்ஞ : ” என்று திருநாமம் உண்டு !! – தானே யஜ்ஞமாயுள்ளவன் என்பது பொருள் ..
” அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ : ஸ்வதாஹம் அஹமௌஷதம் |
மந்த்ரோஹம் அஹமேவாஜ்யம் அஹமக்நிரஹம் ஹுதம் || ” ( கீதை 9-16 )
யாகம் நான்..மஹாயஜ்ஞம் நான்; பித்ருக்களுக்கு வலுவளிக்கும் ஸ்வதா என்கிற பிண்டம் மற்றும் சப்தம் நான், நானே ஹவிஸ்ஸு , மந்த்ரம் நானே, நெய் நானே, அக்னி நானே, செய்யப்படும் ஹோமமும் நானே என்கிறான் கண்ணன் !!
ஸஹஸ்ரநாமத்தில் யஜ்ஞ : என்கிற திருநாமம் தொடங்கி யஜ்ஞகுஹ்யம் என்கிற திருநாமம் வரை , மேற்கண்ட கீதா ச்லோகத்தை விவரிக்குமாப் போலே அமைந்திருக்குமழகு காணத் தக்கது !!
” செய்கின்ற கிதியெல்லாம் யானே ” என்றார் ஆழ்வாரும் !
“வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான்” என்றார் கலியன் !
மறை ,வேள்வி , தக்ஷிணை யாவும் அவனே !
எனவே தான் பிரமன் அச்சங்கொள்ளவில்லை !
உண்மையான நம்பிக்கை அச்சத்தினை துணைக்குக் கூப்பிடாது !
ப்ரஹ்லாதன் சொன்னதும் அது தானே ! சிறுபிள்ளை தான் அவன்..பள்ளியிலோதி வரும் பருவம் தான் !ஆனால் ஸாதுக்களின் தலைவனாகப் பார்க்கப்படுகின்றான்.காரணம் இது தான்.. அவன் அஞ்சியதில்லை !
இரணியனுக்கே வியப்பு ! மகனைப் பார்த்து கேட்கிறான்.. பிள்ளாய் உனக்குப் பயமே இல்லையா ?! சிரித்த படி அக்குழந்தை சொன்ன காரணம் இது தான் !
எவனைக் கண்டால் / நினைத்தால் பயமும் பயங்கொள்ளுமோ ; அவன் என்னோடுளன் ! இனியென் குறையெனக்கு !! இது தான்..இந்த நம்பிக்கை தான் அப்பாலகனை இறுதி வரை காத்தது !!
நாம் கொள்ள வேண்டியதும் அதுவே ! ஆம் !! நம்பிக்கை !! இறை நம்பிக்கை !!! அவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதனையே !!
மஹாவிச்வாஸம் !! பிரமனிடத்து அது இருந்தது !! ஸரஸ்வதியின் தாக்குதல் குறித்து அவன் விசனப்படவில்லை!
ஸரஸ்வதி தான் தப்புக் கணக்கு போட்டிருந்தாள் ! போதாக் குறைக்கு அஸுரர்களின் துர்போதனை வேறு ! அஸுரர்களின் கோபத்துக்குக் காரணங்கள் பல !! இயற்கையாகவே நல்லவர்களைக் கண்டால் ஆகாது. தவிரவும் பிரமனுடைய வேள்வியில் தேவதைகளுக்கு அதிக மதிப்பும் அஸுரர்களான தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை போன்ற புகார்கள் வேறு !
ஸரஸ்வதியைக் கொண்டு வஞ்சம் தீர்த்துக் கொள்ள முற்பட்டதன் விளைவே ; வேள்வியைக் குலைக்கும் செயல்கள் !!
அஸுரர்கள் ஸரஸ்வதியைக் கொண்டே தங்கள் ( நாச ) காரியத்தை முடித்துக் கொள்ள எண்ணினர். அவளும் இசைந்தாள் ! தான் தவஞ்செய்யும் இடத்திலிருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி வந்து சேர்ந்தவள் ; ஒரு மஹாநதியாயப் பெருகி பிரமனின் வேள்வியை அழிக்க வந்தாள் !!
ஸரஸ்வதி ” வேகவதி ” ஆனாள் ! கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழித்துக் கொண்டு அந்நதி பாய்ந்து வருவதே, அவள் சீற்றத்தினை அனைவருக்கும் உணர்த்தியது ! வேள்வியில் கலந்து கொள்ள வந்தவர்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் வேகவதிக் காட்டாற்றிலிருந்து காத்துக் கொள்ள , உயரமான இடங்களைத் தேடத் தொடங்கினார்கள் ! கடல் எழுந்து நின்றாற்போல் அச்சமூட்டியபடி அலையெறிந்த வண்ணம் வேகமாக யாக சாலையை நெருங்கிக் கொண்டிருந்தாள் வேகவதி !
மநோ வேகம் , வாயு வேகம் போன்றவைகள் வேகவதியின் வேகத்திற்கு முன்னே தோற்றுப் போமளவு அந்நதியின் பாய்ச்சல் இருந்தது !!
இன்று இருந்த சுவடே தெரியாமல் , நம்மால் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்ட வேகவதி நதி , ஏழு கிளைப் பிரிவுகளுடன் பெருகிப் பாய்ந்த பெருமையுடையது என்று சொன்னால் உங்களுக்கு அது பொய்யாகத் தான் தோன்றும் !
ஆக்கிரமிப்புகளினால் கிளைப்பிரிவுகளுடன் சேர்த்து வேகவதியையும் மொத்தமாக அழித்த பெருமை நம்மையே சாரும் !
( புராண ) ஹஸ்திகிரி மாஹாத்ம்யமும் , தேசிகனின் ஹம்ஸ ஸந்தேசமும் , வேகவதியின் மஹிமையை ; அதில் நீராடினால் வரும் நன்மைகளை நமக்கு எடுத்துரைக்கின்றது !
நம்முடைய பாபங்களைப் போக்கப் பிறந்த வேகவதியையே அழித்து நாம் நம் பாபச் சுமையைக் கூட்டினவர்களானோம் !
ஆப ஏவ ஹி ஸுமநஸ : என்றும் இனிதென்பர் தண்ணீர் என்றும் பிரமாணங்கள் சொல்லும் நாம் தான் ; நீரின்றி அமையாது உலகு என்று சொல்லும் நாம் தான் நீர் நிலைகளை, நதிகளை அழித்தோம்.
எத்தனையோ பாபங்களை நாம் செய்பவர்களாயினும் ; அவைகளுக்குக் கழுவாய் ( பிராயச்சித்தம் ) இருப்பினும், பெருத்த பாபமான நீர் நிலைகளை அழித்த பாபத்திற்கு விமோசனமிருப்பதாகத் தெரியவில்லை !
கோபத்தோடு பெருகி வந்த ஸரஸ்வதியாம் வேகவதியை, இறைவன் கூட ,அழித்திடாது அணையாய்க் ( அவள் வேகத்தைக் கட்டுப்படுத்திக் )காத்தான் !
ஆனால் நாம் !!
வேகவதியின் ஏழு கிளைப் பிரிவுகளையுமன்றோ அழித்தொழித்தோம்.
அவைகளின் பெயர்களாவது தெரிந்து கொள்வோமே என்கிறீர்களா ?!
வரதன் வந்த கதை ( பகுதி 12-2 )
பிரமனுடைய வேள்வியைக் குலைத்திட , ஸரஸ்வதி வேகவதியாய் உருமாறி , கடுங்கோபத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தாள் !
சுக்திகா, கநகா, ஸ்ருப்ரா, கம்பா, பேயா, மஞ்சுளா, சண்டவேகா என்கிற ஏழு ப்ரவாஹங்களுடன் ( பெருக்குகளுடன் ) அந்நதி பாய்ந்து வந்தது ! கங்கையை விட வேகமாகப் பெருகினபடியால் ” வேகவதி ” என்று இந்நதி பெயர் பெற்றதாம் !
அனைவரும் கலக்கமுற்று என்ன செய்வதென்றறியாது அஞ்சி நின்றிருந்த அவ்வேளையில் , அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம் , அனைவருடைய கண்களிலும் தெரிந்தது !!
“மணிமாடங்கள் சூழ்ந்தழகாய கச்சி ” கணப்பொழுதில் வேகவதியால் கபளீகரம் செய்யப்பட்டு விடும் என்று நினைத்தபடி பலரும் கையைப் பிசைந்தபடி , திக்கற்றவர்களைப் போல் நின்றிருந்தனர் !
பிரமன் தன்னைச் சேர்ந்தவர்களிடம் , ஸரஸ்வதி தேவி , எவ்வளவு தூரத்தில் வந்து கொண்டிருக்கிறாள் ; மற்றும் அவளுடைய வேகத்தின் தன்மை என்ன ? போன்றவற்றை வினவிக் கொண்டிருந்தான் ..
நதியினுடைய பாய்ச்சல் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு பிரமனுக்கு விடை சொல்லப்பட்டது..
பத்து யோஜனை தூரத்தில் சீற்றத்துடன் வேகவதி வந்து கொண்டிருக்கிறாள் ! ( சுமார் 90 மைல் கற்கள் ) ..
சிரித்தார் பிரமன் .. இதோ நீங்கள் கணக்கிட்டுச் சொல்லும் பொழுதே, அந்நதி நான்கு யோஜனை தூரத்தினைக் கடந்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது !
பீஜகிரிக்குக் கீழே அவள் வந்து கொண்டிருக்கும் வேகம் நாம் கணிக்கக் கூடியதல்ல என்றார் !
அஸுரர்களாலே ப்ரேரிதையாய் ( தூண்டப்பட்டவளாய் ) ,
“ஸயஜ்ஞசாலம் ஸபுரம்ஸநாகாசல காநநம் |
ஸதேவ ரிஷி கந்தர்வம் க்ஷேத்ரம் ஸத்யவ்ரதாபிதம் | வேகேந ஸ்ரோதஸோ க்ருஹ்ய பூர்வாப்திம் ப்ரவிசாம்யஹம் ” ||
இந்த யாக சாலை , ஊர் , நகரம், மலை , காடு , தேவர்கள், ரிஷிகள் , கந்தர்வர்களுடன் அனைத்தையும் மூழ்கடித்து , கிழக்குக் கடலுக்கு அடித்துச் செல்வேன் என்றபடி வேகவதி பெருகி வந்து கொண்டிருந்தது !!
அயன் அரியை இறைஞ்சினான் ! பக்தர்களுக்கு இஷ்டத்தை அருளுமவனான எம்பெருமான் ( மீண்டும் ) வேள்வியைக் காப்பதென்று முடிவெடுத்தான்..
ஹஸ்திகிரிக்கு மேற்கே , பீஜகிரிக்குக் கீழே தெற்கு வடக்காய் , இறைவன் துயில் கொண்ட கோலத்தில் நதியைத் தடுத்திட , அணையாய்த் தோன்றினான் !
சயனேசன் என்று அவனுக்குத் திருநாமம் ! சயனேசன் = பள்ளி கொண்ட பெருமான் என்று பொருள் !
என்ன ஆச்சரியம் ! ஊருக்கும் அதுவே பெயராயிற்று !! ஆம் ! இன்றும் பீஜகிரிக்குக் கீழுள்ள அவ்வூர் ” பள்ளி கொண்டா(ன்) ” என்றே வழங்கப்படுகின்றது !!
காட்டாறு போல் பாய்ந்து வரும் வேகவதி , இறைவனே அணையாய்க் கிடந்தும் அசரவில்லை ! ஆனால் ஸரஸ்வதியின் கோபமும் ஆணவமும் குறைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் !!
அணை போல் குறுக்கே கிடப்பவனான பெருமானைக் கண்டதும் அவள் சற்றே குளிர்ந்ததென்னவோ உண்மை தான் !
“தாய் நாடு கன்றே போல் ” ( தாய்ப்பசுவினைத் தேடியோடும் கன்று போல் ) தண்துழாயான் அடியிணையைத் தொட்டுவிட வேண்டும் என்கிற பாரிப்புடன் பாய்ந்தாள் வேகவதி !
“க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே ” ( முண்டக உபநிஷத் )
அனைவருக்கும் அந்தர்யாமியான பெருமானைக் கண்டவுடன் ( அறிந்தவுடன் ) நம்முடைய பாபங்களும் , தீய குணங்களும் அழியுமன்றோ !
ஸரஸ்வதியும் சற்றே சீற்றம் தணிந்தாள் ! தன்னைத் தடுக்க அணையாய்க் கிடக்கும் பரமன் அடியிணையை மட்டுமன்று ; அவனை மொத்தமாக தொட்டுவிட வேண்டும் என்று விரும்பி; தன் வேகத்தைக் கூட்டினாள் !
புன்முறுவல் பூத்தபடி அவள் தன்னை நெருங்கிடக் காத்திருந்தான் பள்ளி கொண்டவன் !!
பள்ளி கொண்டா(ன்) !
இன்றும் ஸ்ரீ ரங்கநாதனாய் நமக்கு அவன் காக்ஷி தரும் தலம் !! பாதிரி மரத்தினை ஸ்தல வ்ருக்ஷமாய்க் கொண்டு அவன் அருள்பாலிக்கும் அத்புதத் தலமிது !!
அம்பரீஷனுக்கு , பகவான் ப்ரத்யக்ஷமான க்ஷேத்ரமிது !! வ்யாஸ புஷ்கரிணி என்று இங்குள்ள திருக்குளம் வழங்கப்படுகிறது !!
சாளக்ராமத் திருமேனியுடன் ” கிடந்ததோர் கிடக்கை ” என்று நாம் மயங்கும்படி சயனித்திருக்கிறான் இறைவன் !!
ஸரஸ்வதி ( வேகவதி ) அணையாய்க் கிடந்த எம்பெருமானை துரிதமாகக் கடந்து சென்றாள் ! தானே அணையாய்க் கிடந்தும் , தன்னை மதியாது, தனக்குக் கட்டுப்படாது அவள் தன்னை மீறி, தன்னை நனைத்துக் கொண்டு ,சீறிப் பாய்ந்தோடுவது கண்டு பெருமான் கோபம் கொள்ளவில்லை !
மாறாக அவள் விருப்பமறிந்து மெல்லப் புன்னகைத்தான் ! ஆம் ! கங்கையை விடத் தான் சிறந்தவள் என்று பட்டம் பெறத்தானே அவள் முயல்கின்றாள் ..அவன் திருவடிகளை மட்டுமே தீண்டப் பெற்று ” தெய்வ நதி ” என்றன்றோ கங்கை போற்றப்படுகின்றாள் !!
நானோ அவனை முழுவதுமாகத் திருமஞ்சனம் செய்துள்ளேன்.. இனிமேல் நானே சிறந்தவள் என்று பூரித்தபடி , பின்னே கிடக்கும் பெருமானை தரிசித்தாள்..
தன்னுடைய வேகப் பெருக்கின் காரணமாக , எம்பெருமான் திருமேனியில் ஆபரணங்களும் , மாலைகளும் , கலைந்தும் சேவையாகாமல் இருப்பதும் கூட அழகாய்த் தான் இருந்தது !
மீண்டுமொரு முறை அவனைத் தீண்டிட எண்ணினாள் நாவுக்கரசி !
சற்று முன்பு தானே கங்கை கூட அவன் திருவடிகளைத் தொடும் பேறு தான் பெற்றது ! நாமோ அவனை நீராட்டும் பேறு பெற்றோம் என்று உளமகிழ்ந்திருந்தாள் .. பின்பு மீண்டும் அவனைத் தொட்டுவிடத் துடிப்பானேன் ?!
நியாயமான கேள்வி ! ஸரஸ்வதியின் உள்ளத்துறையும் செய்தி இது தான் ! முன்பு கங்கையுடன் போட்டி, பொறாமை இருந்தது உண்மை தான்.. அவனைத் தொட்டுவிடத் துடித்ததும் அதற்குத் தான் ! ஆனால் ஒரு முறை அவனைத் தொழுதிடவும் , மீண்டுமவனைத் தொழ வேண்டும் என்கிற பேரவா உந்த , ஒரு பயனை விரும்பித் தொழுதிடாது / தொடாது , தொழுவதே / தொடுவதே பயன் என்கிற பேரறிவினால் அங்ஙனம் ஆசைப்பட்டாள் !!
மீண்டும் ( இன்றைய காவேரிப்பாக்கத்துக்கு அருகில் ) திருப்பாற்கடல் என்கிற ஊரில் அணையாய்க் கிழக்கே கிடந்தான் இறைவன் !
( இன்றும் அங்கே சயனித்த நிலையில் நாம் அவனை தரிசிக்கலாம்.. புண்டரீக மஹர்ஷிக்கு ப்ரத்யக்ஷம் – புண்டரீக புஷ்கரிணியும் உண்டு அங்கே )
வேகவதி இங்கும் இறைவனை ஸ்பர்சிக்கும் பாக்கியம் பெற்றாள் ! பின்பு வேகமும் சற்றே குறைந்தது !! தன் பேற்றினை எண்ணிப் பூரித்தவள் அப்பொழுது தான் ஒரு விஷயம் நினைவிற்கு வந்தவளாய், தன்னை நொந்து கொண்டாள் !!
இரண்டிடத்திலும் ( பள்ளி கொண்டா(ன்) , திருப்பாற்கடல் ) அவனை சேவித்திருந்தும் , அவனைத் துதிக்காமல் போனோமே என்று பொருமினாள் !
யாஸ்யாமி சாலாம் தேவேச தத்ர மே தேஹி தர்சனம் என்று மீண்டும் தரிசனம் தர வேண்டினாள்.. அவள் மனதை அறிந்த பகவானும் , அவ்விதமே அருளத் திருவுள்ளமானான் !!
எங்கு ???
காத்திருப்போம் !!
அடுத்த பகுதிக்குக் காத்திருங்கள் .
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி
குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!
With his Thiruttagappanaar (in the framed photo )