வரதன் வந்த கதை ( பகுதி – 13 )
இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் ; மீண்டுமொரு முறை அவனை தரிசித்திட ஆசைப்பட்டாள் ..அவனை தரிசிக்க இச்சை ( ஆசை ) தானே தகுதி !
“கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ ” என்றும் “போதுவீர் போதுமினோ” என்றும் தமப்பனாரும் திருமகளாரும் ( பெரியாழ்வாரும் , ஆண்டாளும் ) பாடியுள்ளமை ; அவனை அடைய ( நமக்கு )ஆசையே வேண்டியது என்பதனை உணர்த்தும் !
“ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே ” என்றார் லோக திவாகரர் ( திருமங்கையாழ்வார் ) !
ஸரஸ்வதியின்; நாரணனைக் கண்டுவிட வேண்டும் என்கிற ஆர்வமே நதியாய் வடிவு கொண்டதோ என்று சொல்லும்படி இருந்தது அவளது வேகம்.. !
அலையெறிகின்ற அந்நதியின் ஓசை கூட , அவள் எண்ணத்தினை உச்சரிக்குமாப் போலே இருந்தது .. அவளது எண்ணம் தான் என்ன ?!
இரண்டு முறை அவனைக் கண்டிருந்தும், அவனைக் கடந்திருந்தும் நாம் துதிக்காமல் போனோமே என்கிற வருத்தம் அவளை வாட்டிக் கொண்டிருந்தது ! மீண்டுமொரு முறை அவனைக் காண விரும்பியவள் , இம்முறை அவனைத் துதிப்பதோடு மட்டுமின்றி ; அவன் திருவடிகளையே உற்று நோக்கியபடி எந்நாளும் இருந்திட வேண்டும் என்கிற அவள் நினைப்பே ; அலைகளின் ஓசையாகப் பரிணமித்ததோ என்று கருதும்படியாயிற்று !!
தேவர்களும் பிரமனும் கூட ,பெருமானை இறைஞ்சினார்கள்..அத்தனை ஆபத்துகளிலிருந்தும் நம்மைக் காத்தவன் ; இதோ கச்சியிலும் ; ஹஸ்திசைலத்திற்கருகிலும் நிச்சயமாக நம்மைக் காப்பான் என்று உறுதிபட நம்பினார்கள் !
தன் பால் அன்புடையடியவர்க்கு எளியவன் ஆயிற்றே பகவான் ! தோன்றாதிருப்பனோ !
ஸேதுவாய் (அணையாய்) மீண்டும் சயனித்தபடி ” ஸகலரும் ( அனைவரும் ) காண ஆவிர்பவித்தான் அழகன்..
அவன் திருவடிகளை வருடியபடி , ஸரஸ்வதி நாணமுற்றவளாயும், அன்பினால் கனத்த நெஞ்சு உடையவளாகவும் , இதுவரை இருந்த விருப்பு, வெறுப்பு , கோபம் , வஞ்சம் போன்ற தீய குணங்கள் முற்றிலுமாக அழியப்பெற்றவளாயும் ” பரமனடி பாடி”க் கொண்டிருந்தாள் !
ஹஸ்திசைலத்திற்கு மேற்கே வேகாஸேதுவாய் ( வேகமாய்ப் பெருகி வந்த நதியைத் தடுத்திட ஒரு அணையாய் ) மலர்ந்த விழிகளுடனும் , மாறாத புன்னகையுடனும் ஸரஸ்வதியை நோக்கிப் பேசலானான் பெருமான் !
” மத்பாதஜாயா : கங்காயா அபி தே ச்ரைஷ்ட்யம் உத்தமம் ; தத்தம் மயா அதுநா க்ஷேத்ரே மதீயே புண்ய வர்த்தனே |
யஸ்மாத் வேகாத் அனுப்ராப்தா க்ஷேத்ரம் ஸத்ய்வ்ரதம் ப்ரதி ; தஸ்மாத் வேகவதீ இதி ஆக்யாம் லப்த்வா வஸ மதாஜ்ஞயா |
அஹம் சாபி உத்தரே தீரே தவ வத்ஸ்யாமி சோபனே || ”
(இந்த புராண ச்லோகங்களைப் படிப்பதும் கேட்பதும் நமக்கு நன்மை தரும் ! அதற்காகவே இவைகளை இங்கே காட்டியுள்ளேன் ! வாசகர்கள் படித்தின்புறுக !)
ஹே ! ஸரஸ்வதி ! நீ கங்கையை விடச் சிறந்தவள் என்று கொண்டாடப்படுவாய் ! வேகவதி என்றுன்னை அனைவரும் போற்றுவர் ! உனது வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் ! என்கிற வரங்களைத் தந்தான் வெஃகணைப் பெருமான் ! ( வேக அணை என்பது வேகணையாகி அதுவே வெஃகணை என்று திரிந்து அதுவே வெஃகா என்றாயிற்று )
ஸரஸ்வதி ஆனந்த பாஷ்பங்களுடன் பரமனைப் போற்றிக் கொண்டிருந்தாள் !
வேகாபகை ( வேகவதி ) என்கிற பெயர் எனக்கு எத்தனை பிடித்திருக்கிறது தெரியுமா !! ஆறு (நீர் ) வெள்ளத்தோடு பாய்ந்தால் அதற்கு ஆபகா என்று பெயராம் !
அப்படிப் பெருகி வந்த என்னை தடுத்தாட்கொண்டாய் தலைவா !
“வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே ” – உன்னை எங்ஙனம் போற்றுவேன் !
“உன்னிய யோகத்துறக்கத்தினை ” இங்கே காணப்பெற்ற இவ்வடியவள் தான் எத்தனை பாக்கியசாலி !! ” பாந்தன் பாழியில் ” ( பாம்புப் படுக்கையில் ) பள்ளி விரும்பி இங்கே எழுந்தருளினையோ ?!
கச்சிக்கிடந்தவனே – நீ இன்று தானா அணை என்று போற்றப்படுகின்றாய் !
” அம்ருதஸ்ய ஏஷ ஸேது : ” என்று வேதமும் உன்னைப் போற்றுகின்றமை பிரசித்தம் ! உன்னையடைய விரும்புகிறவனுக்கு, இந்த ஸம்ஸாரக் கடலிலிருந்து விடுபட நீயே அணை ஆகின்றாய் !!
இங்கு , உன் நிறமும் அழகும் பார்த்தால், உயர்ந்த “இந்திர நீலக் கல்லே ” ஒரு அணையாக ஆயிற்றோ என்று நாங்கள் வியந்து நிற்கிறோம் !
ஸகல லோகைக ஸேதுவான நீ , வேகவதியான என்னிடையே , அரவணையோடும் கூட அணையாகக் கிடப்பதை மூவுலகிலுள்ளவர்களும் கண்ணும் மனமும் களித்திடக் கண்டு நிற்கிறார்கள் !
நான் சினம் தவிர்ந்தேன் ! என் நிலை உணர்ந்தேன் ! நின்றவா நில்லா நெஞ்சுடையவளாய் , இவ்வேள்விக்கு எத்தனை எத்தனை இடையூறுகளை விளைத்திட்டேன் !
நீயோ என்னிடம் கோபிக்காது என்னை ஆட்கொண்டாய் ! என்று இவ்விதம் பலவாறாக அவள் துதிக்கவும், பிரமனும் மிகுந்த ஆனந்தத்துடன் அவளுடன் இணைந்து கொண்டான் !!
அணை ( எம்பெருமான் ) அவ்விணைக்கு ( பிரமன் – ஸரஸ்வதி ) ஆசி வழங்கியது !
சொன்ன வண்ணம் செய்பவனன்றோ நான் ! பீஜகிரிக்குக் கீழும், திருப்பாற்கடலிலும் தோன்றிய என்னை ; திரும்பவும் கண்டிட நீ ஆசைப்பட்டாய் ! வருகிறேன் என்றேன்.. சொன்ன
வண்ணம் வந்திடவும் செய்தேன் ! விச்வ ரக்ஷைக ஹேதுவான ( உலகினைக் காத்திடும் ஒரே காரணனான ) நான் இங்கேயே என்றும் இருந்து , அபீஷ்ட ஸித்தி( பக்தர்களின் ( ந்யாயமான ) கோரிக்கைகளைத் தரும் ஸாதனம் ) என்று அனைவரும் கொண்டாடிடத் திகழ்வேன் என்றான் !
பிரமனே ! இனி கவலையில்லை ! வேள்வி இனிதே நிறைவுறும் ! அச்சமில்லை !! உனக்கான பரிசு விரைவில் உன் கண் முன்னே !! அப்பரிசு உனக்கானதாக மட்டுமின்றி இவ்வுலகிற்கான பரிசாகவும் ஆகும் !!
காத்திருப்பாய் என்றான் !
நாமும் காத்திருப்போம் !!
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி
குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!
With his Thiruttagappanaar (in the framed photo )