ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-11)
– மீ.விசுவநாதன்
“சிருங்கேரி ஸ்ரீ ஆசார்யாளின் சிங்கம்பட்டி விஜயம்”
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் (33ஆவது பீடாதிபதி) திருநெல்வேலி ஜில்லாவில் பிரவேசம் செய்து அங்கங்கு கிராமங்களில் சிஷ்யர்களுக்கு அனுக்கிரஹம் செய்து கொண்டு ஜய வருஷம் (1895) மாக பகுள த்விதீயை அன்று திருநெல்வேலிக்கு சமீபத்தில் இருக்கும் தாமிரபர்ணீ நதிதீரத்தில் இருக்கும் ஸந்த்யா மண்டபத்திற்கு வந்தார்கள். அங்கு ஆயிரக் கணக்கான பிராம்மணர்கள் கூடி இருந்தார்கள்.
நதி தீரத்திலேயே ஸ்வர்ணப் பல்லக்கில் ஸ்ரீ ஸ்வாமிகளை ஆரோகணம் செய்வித்து பிராம்மணர்களே பல்லக்கைத் தூக்கி கொண்டு வாத்திய கோஷங்களுடனும், வேத கோஷங்களுடனும், மங்களார்த்திகளுடனும் மிக உத்சாகத்துடன் எல்லா வீதிகளிலும் உத்ஸவம் நடத்தி திருநெல்வேலியில் உள்ள சாலிவாடிசுவரர் தேவஸ்தானத்தில் வசதி செய்வித்தார்கள். பக்கத்து கிராமத்தில் உள்ளவர்களும் அங்கேயே தரிசனத்திற்கு வர ஏற்பாடும் செய்யப் பட்டது.
அப்படியே அங்கு கொஞ்ச நாளிருந்து சிஷ்யர்களை அனுக்கிரஹம் செய்து விட்டு, தாமிரபரணி நதியின் மூலஸ்தானமான பாணதீர்த்தத்திற்கு விஜயம் செய்தார்கள். அந்த ஸ்தலம் சிங்கம்பட்டி ஜமீன்தாரின் ஸ்வாதீனத்தில் இருந்தபடியால் அவரே வேண்டிய அனுகூலங்களைச் செய்து கொடுத்தார்கள். அவருக்கு “தீர்த்தபதி” என்ற பிருதும் கொடுத்து, புத்திர ஸந்தானம் ஏற்படும்படி அனுக்கிரகித்தார்கள்.
(ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய “ஸ்ரீமத் ஆசார்யேந்த்ர வைபவம்” என்ற நூலில் இருந்து பகிரப்பட்டது.)
“T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி”
தென்பொதிகையில் களக்காடு, மணிமுத்தாறு, பாநாசம் மலைத் தொடரில் சுமார் எண்பதாயிரம் ஏக்கர் காட்டு நிலப்பரப்பு சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானத்துக்குச் சொந்த மாக இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய வரலாறு கொண்டது இந்த ஜமீன். இதன் 32வது பட்டத்து ராஜாதான் “தென்னாட்டுப் புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து ஷண்முக சுந்தரமுருகதாஸ் தீர்த்தபதி” . சுருக்கமாக T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி. இவருக்கு இப்பொழுது சுமார் வயது எண்பத்து ஒன்பதுக்கும் மேலாகிறது. நன்கு கல்விகற்றவர். சிறந்த ஆன்மிகவாதி. இவர்தான் இந்த ஜமீன் பரம்பரையின் கடேசி ராஜா. ஜமீன் பட்டத்தைத் துறந்தவர்.
“தீர்த்தபதிப் பட்டம் வந்த வரலாறு”
சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானத்தின்குரு சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார். இப்போதைய ராஜா T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்களின் கொள்ளுத்தாத்தா (பூட்டனார்) திவான் பகதூர் சுப்ரமணியத் தேவர் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யார் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வமிகளை பாபநாசத்தில் தரிசித்தார்.
அப்பொழுது சாதுர்மாஸ்ய விரத காலம். ராஜா சுவாமிகளை வணங்கி தங்களது சிங்கம்பட்டி ஜமீனுக்கு விஜயம் செய்யும் படிவேண்டுகிறார். தனக்குவாரிசு வேண்டும் என்று பிராத்தித்து, சாதுர்மாஸ்யம் விரதம்முடிந்த பின்பு சுவாமிகளின் பல்லக்கைச் சுமந்து கொண்டு தங்களது ஜமீனுக்கு அழைத்துச் செல்கிறார். சிங்கம்பட்டியில் சில பிராமணக் குடும்பங்களை குடி அமர்த்தி அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து தருகிறார்.
அப்பொழுது சிருங்கேரி ஸ்ரீசங்கராசார்யார் அவர்களது ஜமீன் பாரம்பர்யம் பற்றித் தெரிந்து கொள்கிறார். பாணதீர்த்தம் வரைஅவர்களது ஜமீனுக்கு உட்பட்டு இருந்ததால், அந்தப் பரம்பரைக்கு “தீர்த்தபதி” என்று பட்டம் தந்து ஆசீர்வதித்தார்.
அதனால் அடுத்த பரம்பரை ராஜாவின் பெயர் “முருகதாஸ் தீர்த்தபதி” என்று அழைக்கப்பெற்றார். அவர் தனது காலத்தில் சிருங்கேரி பீடத்தின் 34வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதீ மகாஸ்வமிகளை பாபநாசத்தில் தரிசனம் செய்து தனது குருநாதரை அவரும் பல்லக்கில் சுமந்து சென்று தனது குருபக்தியை வெளிப் படுத்தினார். இப்போதய ராஜா T .N. S. முருகதாஸ்தீர்த்தபதி அவர்களும் தங்களது குருநாதரை இப்பொழுதும் குரு விச்வாசத்துடன் தரிசனம்செய்து வருகிறார்.
கல்லிடைக்குறிச்சியில் உள்ள திலகர்வித்யாலயம் பள்ளியின் நூற்றாண்டு விழா 2015ம் ஆண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அந்தப் பள்ளியின் நிவாகியாக மிகச் சிறப்பாகச் செயல் பட்டுவரும் ஸ்ரீமான் K. S. சங்கர சுப்ரமணியம் அவர்களுக்கும், பள்ளியின் வித்யா சங்கம் அமைப்பின் தலைவர் ஸ்ரீமான் K. S. இராமன் அவர்களுக்கும் சிங்கம்பட்டி ராஜா ஸ்ரீமான் T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் மிக நெருங்கிய நண்பர். அந்த நூற்றாண்டு விழாவுக்கு சிங்கம்பட்டி ராஜா அவர்களும் வந்திருந்து பள்ளியின் சிறப்பைப் பற்றி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி திரு. ஆர். நடராஜன், அமுதசுரபி ஆசிரியர் திரு. திருப்பூர் கிருஷ்ணன், கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தினமணி ஆசிரியர் திரு. வைத்யநாதன், தினமணி ஆசிரியர் குழுவில் இருந்த திரு. செங்கோட்டை ஸ்ரீராம், பாரதிகாவலர் கு. ராமமூர்த்தி ஆகியோரும் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த விழாவில் சிருங்கேரி குருபக்தரும், ஆன்மிகவாதியுமான சிங்கம்பட்டி ராஜா ஸ்ரீமான் T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்களைச் சந்தித்து உரையாடும் பேறு பெற்றேன்.
ஆன்மிகவாதியும், சிருங்கேரி குருபக்தருமான சிங்கம்பட்டி ராஜா ஸ்ரீமான் T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் 20.05.2020 அன்று தனது எண்பது ஒன்பதாவது வயதில் இறைவன் திருவடியை அடைந்தார். சிருங்கேரி குருநாதர்களின் உத்தமமான அந்த குருபக்தரின் நினைவைப் போற்றி இந்தப் பதிவை குருவின் திருவடிகளில் சமர்ப்பணம் செய்கிறேன்.
(வித்யையும் விநயமும் தொடரும்)