நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்! – 8
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கேள்வி: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன? ஸ்கந்தமாதாவை எவ்வாறு வழிபட வேண்டும்?
பதில்: சிம்ஹாசன கதாநித்யம் பத்மஸ்ரித் கரத்வயா !என்று ஸ்கந்தமாதா வர்ணிக்கப்படுகிறாள்.சுபமஸ்து சதாதேவி ஸ்கந்தமாதா யசஸ்வினி !!என்பது தியான ஸ்லோகம்.
ஸ்கந்தமாதா சிம்ஹ வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள். நான்கு கரங்கள் கொண்டவள். மேல் இரண்டு கரங்களில் பத்மம் தரித்து, வலது கையால் சுப்ரமணிய சுவாமியை மடியில் இருத்தி, இடதுகையில் வரத முத்திரை தரித்து இருப்பாள். வெண்மையான ஒளியோடு பிரகாசிப்பாள். இவ்வாறு ஸ்கந்தமாதாவை தியானிக்க வேண்டும்.
விசுத்தி சக்கரத்திற்கு அதிஷ்டான தேவதை ஸ்கந்தமாதா. நிர்மலமானது விசுத்தி தத்துவம்.
மேலும் ஸ்கந்தமாதா என்று கூறும்போது ஜகதம்பாவின் தாய்மை குணம் இதில் வெளிப்படுகிறது. சுப்பிரமணியர் ஞானத்திற்கு அதிஷ்டமான தெய்வம். சுப்ரமணியரை மடியில் வைத்துக் கொஞ்சும் ஸ்கந்தமாதாவை நாம் தியானித்தால் அம்பாளிடமிருந்து மாத்ரு வாத்சல்யம் கிடைக்கிறது. மேலும் ஞான சொரூபனான முருகனின் கையில் உள்ள ஆயுதத்தை கொடுத்தது கூட அம்பாளே.
ஸ்கந்தமாதாவை உபாசித்து பிரம்ம ஞானத்தை அடைய முடியும். பிரம்மஞான சொரூபமே சுப்பிரமணியன். பிரம்ம ஞானமும் காருண்யமும் அருளக் கூடியது ஸ்கந்தமாதா உபாசனை.
இது நவராத்திரியின் ஐந்தாவது நாளில் செய்வது நவதுர்கா வரிசைக் கிரமத்தில் சிறப்பான வழிமுறை.