பீஷ்மாஷ்டமியின் சிறப்பு
– ராஜி ரகுநாதன் –
“சுக்ல பக்ஷாஸ்ய சாஷ்டம்யாம் மாக மாஸஸ்ய பார்திவ
ப்ரஜாபத்யேச நக்ஷத்ரே மத்யம் ப்ராப்தே திவாகர”
மேற்குறிப்பிட்ட ஸ்லோகத்தின் படி மகாபாரத யுத்தம் ஆரம்பித்து பத்து நாட்கள்வரை பீஷ்மர் யுத்தம் செய்து பித்ரு தேவதைகளின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தன்று காயப்பட்டு கீழே விழுந்தார். தான் விரும்பிய சமயத்தில் மரணிக்கும் வரம் இருந்ததால் உத்தராயணம் வரும்வரை காத்திருந்தார்.
பீஷ்மர் தன் மரணத்திற்கான சமயம் வந்தது என்று நினைவுபடுத்தி, “ஓ தர்மராஜா! சூரியன் வடக்கு திசை நோக்கி நகர்கிறான். இந்த மாதம் தொடங்கி சுக்ல பட்சம் இன்னும் மூன்று பாகங்கள் மீதி உள்ளன” என்று கூறியதால் அன்றைய தினம் மாக மாதம் சுக்லபட்ச சப்தமி. சூரியன் உத்தராயண பிரவேசம் காலம் என்று மேற்குறிப்பிட்ட ஸ்லோகம் தெரிவிக்கிறது.
மகாபாரத காலத்தில் மாக மாதம் சுக்லபட்ச சப்தமி அன்று அதாவது ரதசப்தமி அல்லது சூரிய சப்தமி அன்று சூரியனின் ரதம் வடக்கு திசையை நோக்கி திரும்பும் நாளே உத்தராயண புண்ணிய காலம் என்று தெரிகிறது. மறுநாள் மாக மாசம் சுக்ல அஷ்டமியே பீஷ்மாஷ்டமி. பீஷ்மர் அம்பு படுக்கையில் உயிர்த் தியாகம் செய்த நாள்.
சரியாக இன்றைய காலத்திற்கு 5056 ஆண்டுகள் ஆகிறது. அதாவது மகாபாரத யுத்தம் நடந்தது கிமு 3158 என்று ஜோதிடக் கணக்குப் படி சரியாக உள்ளது.
மாக மாதம் சுக்லபட்சம் பிரதமை முதல் ஏகாதசி வரை உள்ள ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சகம் என்று குறிப்பார்கள். மகாபாரதப் போரில் காயமடைந்து தட்சிணாயனத்தில் உயிரை விடுவதற்கு விரும்பப்படாத பீஷ்மர் உத்தராயணம் வரும்வரை அம்பு படுக்கையில் படுத்திருந்து மாக மாதம் சுக்லபட்ச சப்தமியில் இருந்து ஐந்து நாட்கள் ஒரு நாளைக்கு ஒரு பிராணன் வீதம் விட்டதாக கூறப்படுகிறது.
கால நிர்ணயச் சரித்திரம், நிர்ணய சிந்து, தர்ம சிந்து, கால மாதவீயம் முதலான நூல்கள் மாக மாதம் சுக்லபட்ச அஷ்டமி அன்று பீஷ்மர் இறந்த தினமாக கூறுகிறது.
கார்த்திகை மாதம் பஹுள அமாவாசையன்று மஹாபாரத யுத்தம் ஆரம்ப தினமாக அறியப் படுகிறது. கார்த்திகை மாதத்தில் ரேவதி நட்சத்திரத்தன்று ஶ்ரீகிருஷ்ணர் கௌரவர்களிடம் தூது வந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்படுகிறது.
கார்த்திகை பௌர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு மூன்று நாட்கள் முன்பு உள்ள நட்சத்திரம் ரேவதி. அன்றைய கணக்குப்படி ரேவதி நட்சத்திரம் சுக்கிலபட்ச திரயோதசி ஆகிறது.
தூதுக்கு வந்த கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார். திரும்பி வரும்போது கர்ணனிடம் பேசினார். அந்த சம்பாஷணையில் ஸ்ரீகிருஷ்ணர் ஜேஷ்டா நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று யுத்தம் ஆரம்பம் ஆகும் என்று கர்ணனிடம் கூறினார்.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் 58 நாட்கள் இருந்ததாக மகாபாரதத்தில் கூறப்படுகிறது. பீஷ்மர் யுத்தம் செய்தது 10 நாட்கள். மகாபாரத யுத்தம் தொடங்கிய கார்த்திகை பஹுள அமாவாசையிலிருந்து 68 நாட்கள் கணக்கு வருவது மாக மாதம் சுக்லபட்ச அஷ்டமி.
அதோடுகூட மகாபாரதம் ஆரம்பத்தில் அர்ஜுனன் உறவினர்களைக் கொல்வதற்கு விருப்பப்படவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தத்துவ உபதேசம் செய்கிறான். அந்த உபதேசமே பகவத்கீதை. இந்த உபதேசம் மகாபாரத யுத்தம் ஆரம்பமான நாள் அன்று நடந்தது. அந்த தினத்தையே கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம்.
அதனால் மாக மாதம் சுக்லபட்ச அஷ்டமியே பீஷ்மர் மறைந்த தினமாக கணக்கிடப்படுகிறது. பத்ம புராணத்திலுள்ள ஹேமாத்ரி விரத கண்டத்தில் பீஷ்மாஷ்டமி குறித்து கூறப்படுகிறது. பீஷ்மாஷ்டமியன்று பீஷ்மருக்கு எள் அஞ்சலி சமர்ப்பிப்பவர்களுக்கு சந்தான ப்ராப்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்று பீஷ்மருக்கு தர்ப்பணம் விட வேண்டும் என்று ஸ்மிருதி கௌஸ்துபம் என்ற நூல் குறிப்பிடுகிறது. க்ருத்யாசார சமுச்சயம் என்ற நூலின் ஆதாரமாக பீஷ்மாஷ்டமி சிராத்த தினம்.
பீஷ்ம ஏகாதசி விரதம் இந்த தினத்தில் ஆரம்பிப்பார்கள் என்று நிர்ணய சிந்து தெளிவாக கூறுகிறது. பீஷ்மாஷ்டமி பாரததேசம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விரதம் என்று வ்ரதோத்ஸ்வ சந்திரிகா என்ற நூல் குறிப்பிடுகிறது.
சிலர் பஞ்சாங்க கர்தாக்கள் இன்றைய நாள் குறித்து விவரிக்கையில் நந்தினி பூஜை பீஷ்மாஷ்டமியாக குறிப்பிடுகிறார்கள்.
“வையாக்ரயசத்ய கோத்ராய சாங்க்ருத்ய ப்ரவராயச அபுத்ராய ததாம்யே தஞ்ஜலம் பீஷ்மாய வர்மணே வசூ ராமாவதாராய சந்தனோராத்மஜாய ச அர்க்யம் ததாமி பீஷ்மாய ஆபால ப்ரஹ்மசாரிணே” – என்று இன்றைய தினம் பீஷ்மருக்கு தர்ப்பணம் விட வேண்டும் என்று ஆமாதேர் ஜோதிஷி என்ற நூல் குறிப்பிடுகிறது.
இன்று தர்பணம் செய்பவர்களுக்கு ஓராண்டு செய்த பாவம் தொலையும் என்பது நம்பிக்கை.