ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.
முதலில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார். இதை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது.
இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது ரோகித் சர்மா (42) ஆட்டம் இழந்தார். ஷிகர் தவான் அரைசதம் கடந்து, 96 ரன்னில் ஆட்டம் இழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன், கேப்டன் கோஹ்லி 78 ரன், மணிஷ் பாண்டே (2) , லோகேஷ் ராகுல் 80 ரன் என ரன் குவிக்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 340 ரன் குவித்தது. ஜடேஜா (20), முகமது ஷமி (1) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. வார்னர் (15) பின்ச் (33) எடுத்தனர். லபுசேன் 46 ரன் எடுத்தார். கேரி (18) ஸ்மித் (98) என ஆட்டம் இழக்க, கடைசி 42 பந்தில் ஆஸ்திரேலிய அணி 82 ரன் எடுத்தால் வெற்றி என நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் டர்னர் (13), கம்மின்ஸ் (0) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஜாம்பா (6) ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 304 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி 36 ரன்னில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்றதால், இந்த ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.