சுதந்திர தினமும் அதுவுமாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவிப்பு வெளியிட்டு, கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்றார் மகேந்திர சிங் தோனி. தொடக்கத்தில் விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மெனாகவும் களம் கண்ட தோனி, தனது அதிரடி பேட்டிங்கால் இந்திய ரசிகர்களைக் கவர்ந்தார். அதுவரை எவரும் கையாண்டிராத வித்தியாசமான பேட்டிங் குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட்கள் மூலம் களத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
இவரது அதிரடி ஆட்டத்தின் கவரும் தன்மை காரணமாக, 2007 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்வு பெற்றார். அவரது ஹேர்ஸ்டைல் மாறியது. இந்திய கிரிக்கெட் அணியின் முகமும் மாறியது. அணி வீரர்கள் ஒவ்வொருவரும் இணைந்த கூட்டுமுயற்சி என்பதன் பொருளை வெளிப்படுத்தினார் தோனி. தொடர்ந்து 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிறப்பான முறையில் திகழ்ந்தார். இவரது தலைமையில், ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான உலகக் கோப்பைகளையும் (50 ஓவர், 20 ஓவர், சாம்பியன்ஸ் டிராபி) இந்திய அணி வென்றது ஒரு மாபெரும் சாதனையாகவே பார்க்கப் படுகிறது.
கிரிக்கெட் வடிவின் மூன்று உலகக் கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமை மட்டுமல்ல, ஆசிய கோப்பைகளையும் வென்று தந்த பெருமையும் இவருக்கு இருந்தது. டெஸ்ட் போட்டிகளிலும் தன் பேட்டிங் திறமையை நிரூபித்து இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வழிசெய்தார் தோனி.
இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக விராட் கோலி அறிமுகம் ஆன நிலையிலும், தன் அனுபவத்தையும் நுணுக்கங்களையும் தக்க விதத்தில் அணி வீரர்களுக்கு எடுத்துக் கூறி, களத்தில் சூழலுக்கு ஏற்ப அணி வெற்றி சூடக் காரணமாக இருந்தார் தோனி.
இந்த நிலையில் கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவில் இருந்தும் படிப்படியாக ஓய்வு அறிவித்த தோனி, சுதந்திர நாளான ஆக.15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தோனி, இதுவரை 350 ஒரு நாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இன்று இரவு 7.29இல் இருந்து நான் சர்வ தேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அது 2 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ரசிகர்களின் கருத்துகளும் அதிகம் பகிரப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டா பதிவில் உங்களுடன் விளையாடி நாட்கள் அருமையானது. முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன், உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன் இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா, ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.