சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள கிராமம் சிறுவாச்சூர். இங்கு வசித்து வரும் விவசாயி வெங்கடேசன். இவருடைய மகள் பிரியா.. 10-ம் வகுப்பு வரை படித்த பெண்ணுக்கு போன 1-ம் தேதி வெங்கடேசன் கல்யாணம் செய்து வைத்தார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் ரொக்கமும், அரை பவுன் தங்கமும் அரசு தந்து வருகிறது. அதனால் பிரியாவின் கல்யாணத்துக்கு முன்பு, ஆன்-லைனில் வெங்கடேசன் விண்ணப்பித்தார்.
இது தொடர்பாக தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலும் சென்று விசாரிக்க முடிவு செய்து, தனது அக்கா மகன் கார்த்திக்கை அனுப்பி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கார்த்திக் சென்றுள்ளார்.. அப்போது, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கீதா அங்கிருந்தார்.. இந்த பெண் அதிகாரிக்கு 56 வயதாகிறது.. திருமண உதவித்தொகை விண்ணப்பம் குறித்து கார்த்திக் கீதாவிடம் கேட்டார்.
அதற்கு கீதா, “அப்ளிகேஷன் ஆன்லைனில் வந்துள்ளது.. இதை நேரில் வந்து விசாரிக்க வேண்டும்.. இதற்கு மாவட்டசமூக நல ஆபீசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.. அப்படி பரிந்துரை செய்ய, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கீதா கேட்டுள்ளார்.
அதற்கு கார்த்திக் மறுத்துள்ளார்.. அரசு தரும் பணத்தை தருவதற்கு லஞ்சம் எதற்கு, பணம் தர முடியாது என்று சொன்னதாகவும், உடனே கோபமடைந்த கீதா, அந்த விண்ணப்பத்தை தூக்கி வீசியதாகவும் சொல்லப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக், “சரி… நீங்கள் கேட்ட 3 ஆயிரம் ரூபாய் தரேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.. உடனடியாக சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் சொன்னார்.
உடனே லஞ்ச ஒழிப்பு காவல்துறை, பெண் அதிகாரி கீதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்து, கார்த்திக்கிடம் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்ப முடிவு செய்தனர்.
கீதாவுக்கு போன் செய்த கார்த்திக், “பணத்துடன் வந்திருக்கிறேன்.. ஆபீஸ் வளாக மரத்தடியில் காத்திருக்கிறேன்” என்றார்… உடனே கீதாவும் கார்த்திக்கை தேடி மரத்தடிக்கு வந்தார்.. கார்த்திக்கிடம் லஞ்ச பணத்தையும் வாங்கி உள்ளார். அப்போது மறைந்திருந்த காவலர்கள், கீதாவை அதிரடியாக கைது செய்தனர். இப்போது கீதாவிடம் விசாரணை நடந்து வருகிறது.