பொள்ளாச்சியில் துணிக்கடை அதிபரை உல்லாசத்திற்கு அழைத்து பணம், நகை மற்றும் கார் போன்றவற்றை கொள்ளையடித்த நடன அழகி உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை ராஜ வீதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் அதே பகுதியில் துணிக் கடை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு திருப்பூரைச் சேர்ந்த நடன அழகி சுதா என்பவர் போன் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
வினோத்குமாருடன் தொடர்ந்து போனில் பேசி வந்த சுதா, ஒரு கட்டத்தில் அவருக்கு தனிமையில் இருக்க அழைப்பு விடுத்துள்ளார். அந்த நடன அழகியின் பேச்சில் மயங்கிய வினோத்குமாரும், அவரது அழைப்புக்கு சம்மதம் 2020ஆம் ஆண்டை இன்பமாக கொண்டாட முடிவெடுத்தனர்.
அதன்படி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வினோத் குமார் தனது சொகுசு காரில் சுதாவை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள பூவளப்பருதி என்ற இடத்திற்கு சென்று இருவரும் பண்ணை வீடு ஒன்றில் தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் பண்ணை வீட்டிற்குள் புகுந்துள்ளது. தொழிலதிபர் வினோத்குமாரை தாக்கி அவரிடமிருந்த 5 சவரன் நகை, ஏடிஎம் கார்டு மற்றும் அவரது சொகுசு காரை அந்த கும்பல் பறித்துள்ளது.
பின்னர் வினோத்குமாரையும், சுதாவையும் அவரது காரிலேயே கடத்திக் கொண்டு கேரளா நோக்கி சென்றது அந்த கும்பல். பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தில் வினோத் குமாரை மட்டும் அந்த கும்பல் இறக்கி விட்டுள்ளது.
சுதாவையும் இறக்கிவிடுமாறு வினோத்குமார் கூறியுள்ளார் அப்போது தான் தெரியவந்திருக்கிறது சுதாவும், கடத்தல் கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்று.
அதன்பின்னர், சில நாட்கள் கழித்து 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய அக்கும்பல், இல்லையென்றால் நடன அழகியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளது. இதையடுத்து பயந்துபோன வினோத்குமார் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் காவல் நிலையத்தில் 20 நாட்களுக்குப்பிறகு கடந்த வாரம் புகார் கொடுத்தார்.
காவல்துறையின் அறிவுரைப்படி பணத்தைத் தருவதாக நம்ப வைத்து அந்த கும்பலை தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதிக்கு வரவழைத்தார் வினோத்குமார். அப்போது, மறைந்திருந்த ஆழியாறு காவல்துறை, கடத்தல் கும்பலின் தலைவனான செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான சதீஷ், கமல், அஜய் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்.
மேலும் அவர்களுடன் இருந்த திருப்பூரைச் சேர்ந்த நடன அழகி சுதாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை கைது செய்த ஆழியார் காவல்துறையினர் பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரசாந்தை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.