மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் பாழாய்ப் போகிறது என்று விவசாயிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேதனை தெரிவித்து வந்தனர். காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைக் கருத்தில் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றினார். இது விவசாயிகளிடையே மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி, பெரும் வரவேற்பைப் பெற்றது.
விவசாய நிலங்களைக் காப்பாற்றிக் கொடுத்த முதல்வருக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடத்த விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவிற்கு இன்று முதல்வர் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கோயில் வெண்ணியை அடுத்த சித்தமல்லி கிராமத்தில் வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களுடன் பேசிக் கொண்டே முதல்வரும் வயலில் இறங்கி நாற்று நட்டார். முதல்வர் விவசாயிகளுடன் இணைந்து நாற்று நட்டது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டத்தில், தன்னை வரவேற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆர்வமாக சேர்ந்துக் கொண்டு வயலில் இறங்கி நடவு நட்டார்.
தமிழக முதல்வரின் இந்த எளிமை தமிழகத்தின் தென்பகுதிகளில், விவசாயிகளிடையே பெரும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.