புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 19 வயதான இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐடிஐ இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக சதீஷ்குமாரை, அவரது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் திட்டியதோடு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ்குமார் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் திடீரென தனது புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை செல்போனில் டிசைன் செய்து, அதனை தனது நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி விட்டு தலைமறைவாகினார்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினரும் நண்பர்களும் சதீஷ்குமாரை பல இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் மறுநாள் காலையில் ஊருக்கு அருகேயுள்ள மழவராயன்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் சதீஷ்குமார் தூக்கிட்டு சடலமாகக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சடலத்தை மீட்டு இறுதிச் சடங்கு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சதீஷ்குமாரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.