திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகாசினி மகன் நவநீத் இருவருடனும் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இவரது மனைவி சுகாசினி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை என்பதால் மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் தாராபுரத்தில் உள்ள தனது தந்தைக்கு போன் மூலம் அழைத்த ராம்குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது மகனை பத்திரமாக பார்த்துக்கொள் என சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அதன் பிறகு தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவை ஆன் செய்த ராம்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த காட்சிகள் அனைத்தும் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பானது. இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சுகாசினி நேரில் சென்று பார்த்த போது ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராம்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் மானம் கெட்ட உலககில் இனி வாழ எனக்கு விருப்பம் இல்லை. இந்த உயிர் மயிருக்கு சமம் யாரும் பீல் பண்ணாதீங்க என எழுதி வைத்துள்ளார்.
மேலும், இவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேஸ்புக் நேரலையாக தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவை பதிவிட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.