மான் வேட்டைக்கு சென்ற வாலிபர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இளவம்பாடி காப்புக்காட்டில், மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், பெருமாள் கவுண்டனூரை சேர்ந்த கமலக்கண்ணன், 21, மகனூர்பட்டியை சேர்ந்த சிவா, 35, ஆகியோர், நள்ளிரவில் மான் வேட்டைக்கு காட்டிற்குள் சென்றனர்.
அங்கு, மான் வேட்டைக்கு சுருக்கு வலை வைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் கமலக்கண்ணனின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதைக்கண்டு, அங்கிருந்து தப்பியோடிய சிவா கொடுத்த தகவலின்படி, கமலக்கண்ணன் குடும்பத்தினர் காட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்துள்ளார்.
அவரது உடலை பெருமாள் கவுண்டனூருக்கு எடுத்து வந்த உறவினர்கள், சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர். கமலக்கண்ணனும், சிவாவும் காட்டிற்கு வேட்டைக்கு சென்ற நேரத்தில், மற்ற வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில், கமலக்கண்ணன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என, இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.