மயிலாடுதுறை அருகே செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்ணின் நம்பரை நோட் செய்து, அந்த எண்ணின் வாட்ஸ் அப் கணக்கிற்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய கடைக்காரர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிளியனூர் அகரவல்லம் கிராமத்தைச் சேர்ந்த இதயதுல்லா என்பவரின் 21 வயதான முகமது அப்ரீத் என்ற அவரின் மகன் அதே ஊரில் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.
இவருடைய கடையில் செல்போன் ரீசார்ஜ் மற்றும் மணிடிரான்ஸ்பரிங் செய்யப்படுகிறது. கிராம மக்கள் செல்போன் ரீசார்ஜ் செய்ய இவருடைய கடையை தான் அணுகுகின்றனர்.
அப்படி இவர் கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்மையில் ரீசார்ஜ் செய்ய சென்றிருக்கிறார். இளம்பெண்ணின் மொபைல் நம்பரை வழக்கம் போல முகமது அப்ரீத் ரீசார்ஜ் செய்யும் நோட் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் நம்முடைய மொபைல் எண்களை தான் நாம் வாட்ஸ்அப் எண்ணாக பயன்படுத்துகிறோம்.
முகமது அப்ரீத் இளம் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் செய்திருக்கிறார். புதிய நம்பரிலிருந்து மெசேஜ் வரவும் யார் என்று தெரிந்துகொள்ள இளம்பெண்ணும் மெசேஜ் செய்திருக்கிறார். மெசேஜ் செய்பவர் கடைக்காரர் முகமது அப்ரீத் என்பதை உணர்ந்த இளம்பெண் மெசேஜ் செய்வதை நிறுத்திவிட்டு தனது வேலையைப் பார்க்கத் துவங்கி இருக்கிறார்.
மீண்டும் இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ்கள் குவிந்துள்ளது. செல்போனுக்கு வந்த மெசேஜ் அனைத்தும் வீடியோ மெசேஜ் ஆக இருந்துள்ளது. வீடியோவை திறந்து பார்த்த இளம் பெண் ஆடிப்போனார், முகமது அப்ரீத் அவருக்கு அனுப்பிய அனைத்து வீடியோகளும் முகம் சுளிக்கும்படியான மோசமான ஆபாச வீடியோக்களாகும்.
கடுப்பான இளம் பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்துக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவின் கீழ் முகமதுஅப்ரீத்தை கைது செய்யப்பட்டுள்ளார்.