சென்னை : அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று, தமிழக அரசின் சார்பில் ஆளுநர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
ஆனால் இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக.,வைச் சேர்ந்த நபர் என்று கூறப்பட்ட கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்தார். அனைவருக்கும் ரூ.1000 வழங்கக் கூடாது என்றும், வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என தடை விதித்தது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி, மூன்று நாட்கள் பெரும்பாலான கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்பட்டு விட்ட நிலையில், மீதம் உள்ளவர்களுக்கு வழங்காமல் போனால் அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கூறப் பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில், நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்துள்ளது.
நீதிபதிகள் கூறுகையில், இலவச திட்டங்களை பயன்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். ஓட்டுக்காக மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குவதாக மக்கள் கருதுகிறார்கள். அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள போது மக்களை வரிசையில் காக்க வைப்பது சரியா? இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வழங்கப் படும் ரேஷன் அரிசி, ஆந்திரா, கர்நாடகா, கேரள உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இலவசங்களை வழங்கிக் கொண்டு இருப்பீர்கள்? தமிழகத்தில் வெளி சந்தைகளில் அரசு வழங்கும் இலவச அரிசி விற்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.