23, 24ஆம் தேதிகளில் சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு உள் கர்நாடகா முதல் மத்திய இந்திய பெருங்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் நாளை மறுநாள் முதல் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல்லில் 9 செமீ., மழையும், கொடைக்கானல் சுற்றி உள்ள பகுதிகளில் 7 செமீ., மழையும் பதிவாகி உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.