ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்துவதை அடுத்து, அடுத்த சில வாரங்களில் தாங்களும் செல்போன் கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை இன்று தெரிவித்துள்ளது.
போட்டியான சூழலில் அதிரடி விலைக்குறைப்பு ஆஃபர்கள் என இயங்கி வந்த செல்போன் சேவைத் துறை, இப்போது சற்று வருவாய் மீட்டெடுப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
ஜியோவின் வருகையால் செல்பேசித் துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டது. ஒரு ஜிபி டேட்டாவை 150 ரூபாய்க்கு மேல் விற்ற ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள், இப்போது அதே பணத்திற்கு தினமும் ஒரு ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்களை 28 நாளைக்கு இலவசம் என்றெல்லாம் இறங்கி வந்துவிட்டார்கள்.
ஜியோவின் சலுகைகளால், தங்களது வாடிக்கையாளர்களை பெருமளவு இழந்த வேடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொழில் போட்டியில் சமநிலை இல்லை என குற்றம் சாட்டி வருகின்றன. காரணம், அண்மைக் காலமாக இந்த நிறுவனங்கள் பெருமளவு வருவாய் இழப்பையும் நஷ்டத்தையும் சந்தித்து வந்ததுதான்!
இந்தச் சூழலில் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. இதை அடுத்து, ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜியோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மற்ற ஆபரேட்டர்களைப் போலவே, நாங்கள் இந்திய நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் தொழில்துறையை வலுப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம். டேட்டா பயன்பாடு மற்றும் இணைய வளர்ச்சி மற்றும் முதலீடுகளை மோசமாக பாதிக்காத வகையில் அடுத்த சில வாரங்களில் கட்டணங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என்று கூறியுள்ளது.