நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால் அருவியில் நீர் குறைந்த அளவே விழுந்தது.
தற்போது சபரிமலை ஐயப்ப சீசன் என்பதால், செங்கோட்டை வழியாக சபரிமலை செல்பவர்கள் அதிகம் பேர் குற்றாலத்துக்கு வரத் துவங்கியுள்ளனர். குற்றால அருவியில் குளித்து, குற்றாலநாதர் கோயில், இலஞ்சி குமாரசாமி கோயிலில் முருகனை கும்பிட்டு, பிறகு சபரிமலை செல்வது வழக்கம்.
அந்த வகையில், தற்போது குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப் படுகிறது. அண்மைக் காலமாக பெரும் அளவில் மழை இல்லாத காரணத்தால், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தே காணப் படுகிறது.
மெயினருவி வாகன நிறுத்தம் பகுதியில் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளதால், நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனை அதிகாரிகள் கவனித்து சீர் செய்ய வேண்டும் என்று இப்பகுதியில் இருப்போர் கூறுகின்றனர்.