இலங்கை பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்துள்ள இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார். நவ.18 திங்கள் அன்று அவர் அதிபராக பதவி ஏற்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது.
இதை அடுத்து ரணில் பதவி விலகலாம் எனக் கூறப் பட்டது. அதன்படி, இன்று ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இலங்கை பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து, மஹிந்த ராஜபட்ச விரைவில் பதவியேற்பார் என்று கூறப் படுகிறது.
ஏற்கெனவே மஹிந்த ராஜபட்ச கடந்த 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார். பின்னர், இலங்கை அதிபராக இருந்த சிறீசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபட்சவை பிரதமராக நியமனம் செய்தார். ஆனால், நீதிமன்றம் சென்ற ரணில் விக்ரமசிங்க, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தனது தம்பியின் தயவில் மீண்டும் இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபட்ச பதவியேற்க வுள்ளார். இதை அடுத்து, இலங்கை அதிகாரமும் ஆட்சியும் மீண்டும் ராஜபட்ச குடும்பத்தின் கரங்களுக்கே வந்துள்ளது.