இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்று, நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்று, டி20 தொடர் தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி, டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை முழுமையாக வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. அதற்கு பழி தீர்ப்பது போல், ஒரு நாள் போட்டித் தொடரை முழுமையாக வென்று இந்திய அணிக்கு ஷாக் கொடுத்துள்ளது நியூஸிலாந்து அணி.
நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் புதன்கிழமை இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 296 ரன் எடுத்தது. கேஎல் ராகுல் சதம் அடித்து 112 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி மார்டின் குப்தில், ஹென்றி நிகோல்ஸ் ஆகியோரின் சிறப்பான தொடக்கத்தால், 15-வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது.
தொடர்ந்து அந்த அணி வீரர்கள் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி, 48-வது ஓவரின் முதல் பந்திலேயே வெற்றி இலக்கை எட்டினர். இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து அணி 3-0 என முழுமையாக வென்று அசத்தியுள்ளது.
31 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி முழுமையாக இழப்பது இதுவே முதன்முறை!