கொரோனா வைரஸ் பாதிப்பின் மையமாக ஐரோப்பாவை அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்த நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடுமையாக உள்ளது. இதுவரை சுமார் 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்தியக் கிழக்கு நாடுகள், மேற்காசிய நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது! ஈரானில் 85 பேர், ஸ்பெயினில் 36 பேர் என நேற்று உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் தனது நாட்டின் எல்லைகளை மூடியுள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கு வேற்று நாட்டினருக்கு தங்கள் நாட்டுக்குள் வர அனுமதியில்லை என்று உக்ரைன் கூறியுள்ளது. பாகிஸ்தானும் தன் நாட்டு எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரானா வைரஸை கட்டுப்படுத்த உறுதியான திட்டத்தை வகுக்க சார்க் நாடுகளின் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வீடியோ கான்ஃபரன்சிங் உரையாடலுக்கு ஆர்வம் தெரிவித்துள்ளார்.
மோடி தனது ட்விட்டர் பதிவில்…
சார்க் நாடுகளிலுள்ள மக்களை நலத்துடன் வைத்திருப்பதற்கான வழிகளை உருவாக்குவது குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தலாம்… என்று தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்கள் வாழும் இடமாக திகழும் தெற்காசியா, மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யாமல் பின்வாங்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த அழைப்பை நேபாள பிரதமர் ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, பூடான் பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸுக்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலும் இதுவரை 81 பேருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை அடுத்து இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை ஒரு வாரத்துக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது! பொதுமக்கள் அதிகம் கூட்டமாக வரும் நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரம் தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களை 31ம் தேதி வரை மூட நிதிஷ்குமார் அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கு பதிலாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் 31ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கீழ் திருப்பதியில் மருத்துவ ஊழியர்களால் தீவிர பரிசோதனைக்கு பிறகே கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளத்தில் சபரிமலை உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவஸ்வம் போர்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப் பட்டுள்ளன. தமிழகத்தில் கேரள எல்லையோர மாவட்டங்களில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.