சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 208 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்த வைரஸின் தாக்கத்தால், ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு உயிர்கள் பறிபோயிருக்கின்றன. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு சுமார் 48 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி, பெரும் தலைவர்களையும் கொரோனா வைரஸ் பதம் பார்த்துள்ளது. இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்ததாகக் கூறப் படுகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதை அடுத்து அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் அவர், கூடுதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரசுடன் போராடி வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வேண்டும் என அமெரிக்கா சார்பில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைவார் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியபோது, அமெரிக்காவில் மட்டும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மற்ற உலக நாடுகள் மேற்கொண்டதை விட அதிகமாகும். ஒரு சுரங்கப்பாதையில் தெரியும் சிறிய வெளிச்சம் போல, நாங்கள் செய்துள்ள பணிகளால் பெருமையடைவோம். அபாட் என்னும் ஆய்வகம் மூலம் 15 நிமிடத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிகிறது.
வாரத்திற்கு 1200 பேருக்கு இதன் மூலம் சோதனை செய்யப்படுகிறது. 300 மில்லியன் கையுறைகள், 8 மில்லியன் மாஸ்க்குகள், 3 மில்லியன் கவுன்கள் மற்றும் இன்னும் பல முக்கியமான பொருட்கள் இப்போது நாடு முழுவதும் விநியோகிக்கப் படுகின்றன.
கொரோனா பாதித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எனது நண்பர், சிறந்த மனிதர்! சிறந்த தலைவர் அவர். வலிமையான நபரான அவர் நலமாக இருப்பார், குணமடைவார் என நம்புகிறேன். அவருக்காக அனைத்து அமெரிக்கர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றார்.