அமெரிக்காவின் நியூயார்க்கில், ப்ரோன்ஸ் உயிரியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவு உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சைனாவில் தொடங்கி அமெரிக்காவுக்குச் சென்று மிக அதிக அளவில் பரவி மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பல்லாயிரகணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோன்ஸ் உயிரியல் பூங்காவில் 4 வயது நாடியா என்ற மலயான் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில புலிகளுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகில் முதன்முறையாக விலங்கிற்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப் பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரோன்ஸ் உயிரியல் பூங்காவின் மூத்த விலங்கியல் மருத்துவர் பால் காலே இதுகுறித்துக் கூறுகையில், கோவிட்19 தாக்கப் பட்ட ஒரு மனிதரிடம் இருந்து விலங்கு ஒன்றுக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது இது முதல் கேஸ் என்று கூறினார். ஞாயிற்றுக் கிழமை மாலை இது குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது. ஏற்கெனவே இந்த உயிரியல் பூங்கா மார்ச் 16ம் தேதியில் இருந்து மூடப் பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த முறை பரவிய சார்ஸ் கோவ்-2 வைரஸ் பல்வேறு வீட்டு விலங்குகளுக்கும் பரவியிருந்தது கண்டறியப் பட்டது. தற்போது கோவிட் 18 வைரஸுக்கு ஹாங்காங்கில் போமரேயன் நாய், ஜெர்மன் ஷெபர்ட் ஆகியவற்றுக்கும் பெல்ஜியத்தில் ஒர் வீட்டு பூனைக்கும் தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
வீட்டு மற்றும் காட்டுப் பூனைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை சீன ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியது. அதே நேரம் பூனைகள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும் என்று அது தெரிவித்திருந்தது!
இந்நிலையில், அமெரிக்காவில் புலி ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளிடமும் பரவி வருவது தெரியவந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனாவால் தற்போது வரை 1,258,091 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 68,287 பேர் உயிர்ழந்துள்ளனர்.
மனிதர்களை மட்டுமே அச்சுறுத்தி வந்த இந்த கொடிய நோய் இப்போது விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Wildlife Conservation Society (வனவிலங்கு பாதுகாப்பு சங்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடியா என்ற நான்கு வயது பெண் புலி மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது, உலர் இருமல் மற்றும் பசியின்மையால் சாப்பிடாமல் இருந்தது. சோதனை முடிவில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் சகோதரியான அஸுல் என்ற புலியும் இரண்டு அமுர் புலிகள் மற்றும் மூன்று ஆப்பிரிக்க சிங்கங்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஒருவரால் இந்த விலங்குகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.