கடந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி அன்று, பிரிட்டனில் உள்ள ஸ்டாஃபோர்ட்ஷையர் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்த ஜோசப் ஃபிளாவில் என்ற 19 வயதான இளைஞர் மீது கார் ஒன்று பயங்கர வேகத்தில் மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமாகி கோமாவில் ஆழ்ந்தார். பிரிட்டனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமலான 3 வாரங்களுக்கு முன்பு ஜோசப் ஃபிளாவில் கோமா நிலைக்கு சென்று விட்டார்.
கடந்த 11 மாதங்கள் உலகில் என்ன நடந்தது என்பது கூட தெரியாமல், கோமாவில் படுத்த படுக்கையாகி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் கோமா நிலையிலிருந்து ஜோசப் ஃபிளாவில் மீண்டார். 11 மாதங்கள் கோமாவில் இருந்த விஷயத்தை அவரிடம் டாக்டர்கள் தெரிவித்ததும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.
அதனைத்தொடர்ந்து, அருகில் தனது பெற்றோர்கள் இல்லாதது கண்டு டாக்டர்களிடம் ஜோசப் ஃபிளாவில் கேட்க, கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி இல்லை என விளக்கியிருக்கிறார்கள்.
கொரோனாவினால் உலகமே நிலைகுலைந்து போன விஷயம் தெரியாமல், கொரோனா தொற்றா? அப்படி என்றால் என்ன? எதற்காக லாக்டவுன்? என அடுத்தடுத்து ஜோசப் ஃபிளாவில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க டாக்டர்கள் சற்று திணறவே செய்தனர்.
மேலும் சமூக இடைவெளி பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது குறித்தும் டாக்டர்கள் அந்த இளைஞருக்கு ஓரளவு புரிய வைத்துள்ளனர். இன்னும் ஒருசில வாரங்களில் ஜோசப் ஃபிளாவில் முழுமையாக குணமடைந்து தேறி விடுவார் என டாக்டர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.