இலங்கையில், மிருசுவிலில் திட்டமிட்டே சைவக் கோயிலை இடித்தார்கள் என்று திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார் இலங்கை சிவசேனையின் மறவன்புலவு க சச்சிதானந்தன்!
இது குறித்து ஒரு வீடியோ வைரலானது. அதில், வெகு நேரமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் வாகனம் ஒன்று, திடீரென கிளம்பி கோயிலின் மீது மோதி உடைத்து விட்டு, பின் அங்கிருந்து மெதுவாகக் கிளம்பிச் செல்கிறது. இந்தக் காட்சிகள் அங்குள்ள ஒரு சிசிடிவி காமெராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் மிருசுவில் தெற்கு யா/336 நிலதாரிப் பிரிவில்
கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் கண்டி வீதி ஓரத்தில் அமைந்த அருள்மிகு பிள்ளையார் திருக்கோயிலை வைகாசி 25ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 8 6 2021 அன்று அதிகாலை 4-5 மணியளவில் பார வண்டியால் உடைத்துள்ளனர்… என்கிறார் க.சச்சிதானந்தன்.
மிருசுவில் தெற்கு நிலதாரி பிரிவில் முகமதியர் வாழ்வதில்லை;
பௌத்தர்கள் வாழ்வதில்லை; 169 கிறித்தவர்கள் வாழ்கிறார்கள்;
600 சைவர்கள் வாழ்கிறார்கள் … இங்கு மொத்த மக்கள்தொகை 769.
பிரதேச செயலகத்தில் பதிவு செய்த ஒரே திருக்கோயில் ஆயத்தடிப் பிள்ளையார் கோயில் மட்டுமே. பிரதேச செயலகத்தில் கிறிஸ்தவ வழிபாட்டிற்கும் கெற்பேலி கிழக்கு மாதா கோயில்
மிருசுவில் நிக்கொலஸ் தேவாலயம் பதிந்து உள்ளனர்.
தென்மராட்சி பிரதேச செயலகப்பிரிவில் 70,743 மக்கள் தொகை. இதில், 66,888 சைவர்கள், 267 புத்தர்கள் 3192 கிறித்தவர்கள்,
396 முகமதியர்கள். இந்தச் சூழ்நிலையில் கண்டி வீதிக்கு அருகில் இருந்த அருள்மிகு பிள்ளையார் திருக்கோயிலை உடைத்துள்ளனர்.
சைவக் கோயில்களை இடிக்கலாம் உடைக்கலாம் அழிக்கலாம் என இந்தத் தீவில் வாழ்கின்ற பௌத்தர்கள் நினைக்கிறார்கள்
கிறித்தவர்கள் நினைக்கிறார்கள் முகம்மதியர்கள் நினைக்கிறார்கள்.
தம் நினைப்புக்குச் செயல்வடிவம் கொடுத்துச் சைவத் திருக்கோயில்கள் இடித்து உடைத்து அழிப்பதால் சைவத் தமிழ் மக்களின் நெஞ்சங்கள் புண்ணாகின்றன. சைவத் தமிழர்கள் கண்களில் நீர் புரண்டு ஓடுகிறது. சைவத் தமிழ் இளைஞர்கள் கொதித்த உணர்வுகளை அடக்கி வாளாவிருக்கின்றனர்.
அடுத்து என்ன செய்யலாம்? சைவக் கோயில்களை இடித்து உடைத்து அழிப்போரின் சவால்களை எவ்வாறு சந்திக்கலாம்? என்பது சைவத் தமிழ் இளைஞர்களின் நெஞ்சத்தில் எழுகின்ற வினா.
பாணந்துறை அருள்மிகு முருகன் கோயிலில் கொடி மரத்துக்கு அருகே அக்கோயிலின் சிவாச்சாரியாரை உயிரோடு கொளுத்திய நிகழ்ச்சியே பிரபாகரனை உருவாக்கியது என்பதை மதக் கலவரங்களை தூண்டுவோர் மறந்து விடுகிறார்கள்.
இந்தத் தீவில் மதக் கலவரங்களை உருவாக்க வேண்டும் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும் வறுமை தாண்டவம் ஆட வேண்டும் ஏழ்மையைக் காரணமாக்கி மக்கள் சேவை என்ற போர்வையில் மதமாற்றங்களைத் தொடர வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் உள்ளவர்களே மிருசுவில் தெற்கில் கண்டி வீதிக்கு அருகில் அமைந்திருந்த அருள்மிகு பிள்ளையார் திருக்கோயிலை அடித்து உடைத்து நொறுக்கி உள்ளார்கள்… என்று தெரிவித்துள்ளார் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.