ரஷ்யாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 64 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீயில் சிக்கிய சுமார் 2 முதல் 17 வயதுடைய 41 குழந்தைகள் உள்பட 70 பேரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன. கெமெரோவோ நகரிலுள்ள சைபீரியா சிட்டி என்ற வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 4 மாடியில் பிடித்த தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
கரும்புகைக்கு மத்தியில் வெளியேற வழியில்லாததால் மக்கள் ஜன்னலை உடைத்து கீழே குதித்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வருவதற்குள் தீயில் கருகி 64 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
40 குழந்தைகள் உட்பட 125 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 62 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
அதில் பலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புக்கு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரஷ்யா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.