ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிறு இன்று காலை இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன. மூன்று சர்ச்கள், ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 160க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இலங்கை அதிபர் சிறீசேன ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில்…
மதிப்பிற்குரிய பௌத்த குருமார்களே… ஏனைய மத தலைவர்களே… அன்பிற்குரிய பெற்றோர்களே பிள்ளைகளே… நண்பர்களே..
நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தை இட்டு நான் மிகவும் வருத்தம் அடையும் அதே வேளை இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
எதிர்பாராத இச்சம்பவத்தினால் என்னைப் போன்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன்
இச்சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பதை ஆராய்வதற்காக போலீஸ் புலனாய்வுப் பிரிவு விசேட அதிரடிப்படையினர் இராணுவம் வான்படை கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு துறைக்கு பணிப்புரை வழங்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமாக துரித விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்
ஆகையால் விசாரணைகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது
இச்சம்பவத்தை இட்டு ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருக்கும் பின்னணியில் அனைவரினதும் ஒத்துழைப்பே மிக முக்கியமாக தேவைப்படுகிறது என்பதை அரசாங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தோடு நாட்டு மக்கள் என்ற வகையில் அனைவரும் அமைதி காக்கும் அதேவேளை வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயல்பட வேண்டாம் என்றும் நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்
அத்தோடு நிலைமையை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நடந்த சம்பவத்தின் பின்னணியை கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என்பதையும் நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி – என்று கூறியுள்ளார்.