பேரூராட்சி அலுவலகத்தில், நடிகர் விஜய் பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடியதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் செயல்அலுவலர் ராஜா தலைமையின்கீழ் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டியது. அரசு அலுவலகத்தில் தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சியினரின் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்பது வழக்கம்.
இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செயல்அலுவலர் ராஜா கேக் வெட்டி சக நண்பர்கள் அனைவருக்கும் ஊட்டிய படி கொண்டாட்டத்தில் திளைத்துள்ளார். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, பல்வேறு ‘வாட்ஸ் ஆப்’ குரூப்களில் இந்த விஷயம் நேற்று வெளியானது. அதில், ‘கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு, மாவட்டத்தில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இச்சூழலில் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தலைமையில், பேரூராட்சி அலுவலத்தில், விஜய் பிறந்த நாளை, அவரது ரசிகர் மன்றத்தினர் விழா கொண்டாடி, நலத்திட்ட உதவி வழங்கியுள்ளனர்.
இக்கட்டான கால கட்டத்தில், அலுவலக வளாகத்தின் உள்ளே, பேனர் வைத்து செயல் அலுவலர் தலைமையில், கேக் வெட்டி கொண்டாடியது, சட்டத்தை மீறிய செயலாகும். நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்?’ எனக் கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர், ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே அந்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவியாக, தூய்மைப் பணியாளர்களுக்கு, ‘மாஸ்க்’ மட்டுமே வழங்கியதாக தெரிகிறது.
விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் கொரோனா காலத்தில் வேண்டாம் என சொன்னதாக தகவல்கள் வெளியாகியது ஆனால் அவர் ரசிகர் ஒருவர் அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதே தவறு அதுவும் கொரோனா தீவிரமாக பரவி வருகின்ற இந்நிலையில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட இந்நிகழ்வு குறித்து, பல்வேறு கண்டனங்கள் எழுகின்றன.
விஜய் தன் பேச்சில் நிலைப்பாட்டுடன் இருந்தால் தானே அவர் ரசிகர்கள் அவர் பேச்சை பின்பற்றுவார்கள் அவருக்கே ஒரு கொள்கை கிடையாது என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவிக்கின்றனர்.
*பேரூராட்சி அலுவலகத்தில் விஜய் பிறத்நநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா பணியிடைநீக்கம்* pic.twitter.com/IKQzqLnyKV
— VijayFansClub (@vijayfc) June 30, 2020