உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம்,
கொரோனா பிரச்னை காரணமாக, பிரபல நடிகை மனநல சிகிச்சைப் பெற்றுள்ளார்.
தமிழில், உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், கருணாஸ் நடித்த சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு பிரசாத்.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இவர் தனது நீண்ட நாள் நண்பரான இந்திப் பட இயக்குனர் ரோகித் மிட்டலை காதலித்து வந்தார். காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்துகொள்ள, இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. பின்னர், தனது திருமணத்தை முறித்துக்கொண்டதாக நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் தெரிவித்தார்.
இதுவும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுபற்றி சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்த விவாகரத்து முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்துள்ளோம். எல்லா புத்தகங்களையும் அட்டை டூ அட்டை படித்துவிட முடியாது. அதற்குப் புத்தகம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தமல்ல’ என்று அப்போது கூறியிருந்தார் நடிகை ஸ்வேதா.
இந்நிலையில், கொரோனா காரணமாகத் தனிமையில் வசிக்கும் ஸ்வேதா பாசு, மனநல சிகிச்சைப் பெற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, என் வாழ்க்கையில் எப்போதும் தனியாக வசித்ததில்லை. முதலில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வசித்தேன். பிறகு கணவருடன் (விவாகரத்துக்கு முன்) வசித்தேன். விவாகரத்துக்குப் பிறகு, தனியாக வசித்து வருகிறேன்.
இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பிரச்னை வந்துவிட்டது. இப்போதைய சூழலில் எனது மன நலம் பற்றி கவலைப்பட்டதால், வீடியோ மூலம் ஒரு அமர்வில் உட்காரலாமா என்று மனநல மருத்துவரிடம் கேட்டேன். பிறகு சிகிச்சைப் பெற்றேன். இந்த காலகட்டத்தில் பலர் இந்த மனநல சிகிச்சையை நாடுவதாக அந்த தெரபிஸ்ட் சொன்னார். நான் ஏற்கனவே டிசம்பரில் இரண்டு அமர்வு இருந்தேன். பிறகு நன்றாக இருந்தேன்.
இப்போது மீண்டும் சிகிச்சைப் பெற்றுள்ளேன். மன ஆரோக்கியம் முக்கியமானது. இந்த காலகட்டத்தில் அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்தில் என் அம்மா என்னை பார்க்க வந்தார். சில அடி தூரத்தில் நின்று கொண்டே பேசினோம். அவரை அணைக்க கூட முடியவில்லை. இது கடினமானது. விரைவில் இந்த கொரோனா பிரச்னை கடந்து போகப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்வேதா பாசு.