தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள்கள் சுற்றுப்பயணம் செய்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டன் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். முதல்வருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர்.
இந்தப் படங்கள் மீம்ஸ்களாக சித்திரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தநிலையில்தான், முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில்,”தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்மீது, தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவதூறு பரப்பிவருகிறார். குறிப்பாக, கிருஷ்ணா கே.பி.எம் என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தில் தகாத வார்த்தைகளால் கொச்சைப்படுத்திப் பேசி, பதிவிட்டுவருகிறார்.
எனவே, அவரது ஃபேஸ்புக் பக்கத்தை முடக்குவதோடு, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர். இதேபோல், அன்னவாசல், அறந்தாங்கி காவல் நிலையங்களிலும் அ.தி.மு.க சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.