சென்னை: ஹெல்மெட் அணிவது குறித்து பாமக., நிறுவுனர் ராமதாஸ் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தன்னிச்சையான உணர்வாக, ஹெல்மெட் அணிவது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது அறிக்கைக்கு பதில் மடல் அனுப்பியுள்ளார் நம் வாசகர்.
அவரது மடல்…
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய , பா.ம.க நிறுவனர் மருத்துவர் ஐயா அவர்களுக்கு, வணக்கம்..!!
“தலைக்கவசம் அணிவது அனிச்சை செயலாக மாற வேண்டும்” என்று தாங்கள் இன்று அறிக்கை வெளியிட்டமைக்கு நன்றி.
ஆனால் இச்சட்டத்தின் பக்க விளைவுகள் சிலவற்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.
தலைக்கவசம் அணிவதற்கு எதி ரான நிலைப்பாட்டில் இந்த கடிதம் எழுதப் படவில்லை. உயிர்காக்க, தலைக்கவசம் அணிய வே ண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அதிவிரைவு நெடுஞ்சாலைகளிலும் நெரிசல் மிக்க நகர்ப்புற பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், ஒரு மிதிவண்டியின் வேகம்கூட செல்ல முடியாத முட்டு சந்துகளிலும் தலைக்கவசம் அணிய கட்டாயப்படுத்தப்படுவது நியாயமில்லை.
அதேபோல் 350 / 500 சிசி திறன் கொண்ட அதிவிரைவு வண்டிகளுக்கும், 50 சிசி திறன் கொண்ட 30 கி மீ வேகத்தில் கூட இயக்க முடியாத மொபெட் போன்ற சிறிய வகை வாகனங்களுக்கும் எந்த வேறுபாடுமின்றி கட்டாய தலைக்கவச சட்டத்தை திணிப்பது ஏற்புடையதல்ல. அடுத்த தெருவிற்கு சென்று பாலோ, செய்தித்தாளோ வாங்க செல்லும் ஒருவரை தெரு முனையில் பிடித்து அபராதம் வசூலிப்பது எவ்வகை நியாயம்?
பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது மனைவி, குழந்தையோடு பயணிப்போர் குழந்தைக்காக அபராதம் செலுத்தியோ அல்லது காவல் அதிகாரியின் கருணையை வேண்டியோதான் பயணிக்க வேண்டும். அவர்களுக்கு காரில் செல்லும் அளவு பொருளாதார வசதி இல்லை என்பதால்தான் மூன்று பேர் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்ல நேரிடுகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகள் பதிவு, உரிமம், காப்பீடு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களின் அசல் சான்றிதழ்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் வந்தது.
நாட்டின் எங்கோ சில இடங்களில் புழுதியும், வேறுசில இடத்தில் பனிமூட்டமும் உள்ளதால் வெயில் கொதிக்கும் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் முகப்பு விளக்கு எப்போதும் எரியும்படி புதிய வண்டிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு, (AHO) வண்டியின் முகப்பு விளக்கை அணைக்கும் விசையே இல்லாமல் வண்டிகள் தயாரிக்கப்பட தொடங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது.
தலைக்கவசம் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகளால் வாகன ஓட்டிகளை மிரட்டி துரத்தியதால் நாகர்கோயில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் வாகன ஓட்டிகள் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் அடுத்த பேரிடியாக பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அந்த பயணம் மட்டுமே பணி அல்ல. வியாபாரிகள், விற்பனை பிரதிநிதிகள், பொருட்கள் கொண்டு சேர்ப்போர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வரவேண்டியவர்கள் அத்தனை முறை தலைக்கவசத்தை கழற்றி, கழற்றி மீண்டும் அணிவது சிரமம் – எனினும் அணிகிறோம்.
ஆனால் வெளியூர் சென்று அங்குள்ளவரோடு வாகனத்தில் பயணிக்க நேர்வோர் தலைக்கவசத்தை தூக்கிச்செல்வது சாத்தியமா? முகமறியாத ஒருவரிடம் வேண்டுகோள் பயணம்(lift) மேற்கொள்வோரும் இதனால் புறக்கணிக்கபடுவர்.
எனவே பின்னால் அமர்பவர் தலைக்கவசம் அணிவது அவரவர் விருப்பத்திற்கே விடப்படவேண்டும்.
எல்லா இடங்களிலும் அனைத்து வண்டிகளிலும் ஹெல்மெட் கட்டாயம் எனும் விதியில் மாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சிறு சாலைகளில் விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நம் மாநில காவல் துறையில் பணியாற்றும் அனைவரும் காந்தி, இயேசு, புத்தர் போன்ற மகான்கள் இல்லை என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இங்கு கோரப்பட்டுள்ள விலக்குகள் கிடைத்தால் மட்டுமே நடுத்தர வர்க்கம் இருசக்கர வாகனத்தில் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும் இல்லையேல் இச்சட்டம் மென்மேலும் லஞ்சம் வளர்க்கவும், உயிர் பறிக்கவும் மட்டுமே பயன்படும் என்பதை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
அன்பும் நன்றியும்!!!
அன்பன்,
பா சத்தியநாராயணன்
திருச்சி.