திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடி பொறியியல் கல்லூரியில், தமிழகம்,மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் விடுதியும் உள்ளது.
இங்கு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவியும், சென்னை கல்பாக்கத்தை சேர்ந்த டிப்ளமோ படித்த ஒரு வாலிபரும் காதலித்து வருகிறார்கள். கடந்த 1ம் தேதி அனுமதி இல்லாமல் விடுதியை விட்டு வெளியே சென்று காதலுடன் மாணவி 2 நாட்களாக ஊர் சுற்றி உள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு கல்லூரிக்கு செல்வதற்காக வந்தவர் கல்லூரி முன் உள்ள பஸ்நிறுத்த நிழற்குடையில் காதலனுடன் ஜாலியாக இருந்துள்ளார். அப்போது அங்கு, 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார்.
மாணவியும், அவரது காதலனும் இருந்த கோலத்தை பார்த்து, தன்னை போலீஸ் என்று கூறி விசாரித்துள்ளார். அப்போது இருவரும் உச்சகட்ட கஞ்சா போதையில் உளறி இருக்கிறார்கள். இதை தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்ட அந்த வாலிபர், காதலனையும், மாணவியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காதலன் தப்பித்தால் போதும் என ஓடிவிட்டார்.
பின்னர், மாணவியை கல்லூரி விடுதியில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால், விடுதிக்கு அழைத்து செல்லாமல் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
போதை தெளிந்த பின் காதலனுடன் அந்த மாணவி துவாக்குடி காவல்துறையில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலன் கூறிய அடையாளங்கள் கொண்டும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் அந்த வாலிபரை கண்டுபிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன் வயது 30 எனவும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சிறைக்கு சென்று வந்தவர் என்றும் தெரியவந்தது. விசாரணையில் அவர், மாணவியை நான் பலாத்காரம் செய்யவில்லை. அவர் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன் எனக் கூறி உள்ளார்.
இது குறித்து காவல்துறை வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் கைதான மணிகண்டன், என்ஐடி காம்பண்ட் பின்புறம் தான் வசித்து வருகிறாராம். தனியாக வசித்து வருவதால், தினமும் இரவு நேரத்தில் மாணவிகளை அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
வார்டன்கள் மற்றும் இரவு நேர செக்யூரிட்டிகளுக்கு தெரியாமல் மாணவிகளை அழைத்து வரமுடியாது. எனவே மணிகண்டனுடன் விடுதி வார்டன்கள், செக்யூரிட்டிகளுக்கும் தொடர்பு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினால் பல தகவல்கள் வெளியே வரக்கூடும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருச்சி எஸ்.பி. ஜியாஉல்ஹக் , ஏ.எஸ்.பி பிரவீன்குமார் ஆகியோர் நேற்று கல்லூரிக்கு சென்று அதிகாரிகள் முதல் வார்டன் வரை 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், மாணவி வெளியே செல்ல அனுமதி வாங்கினாரா, மாணவி விடுதியில் இல்லாதது குறித்து புகார் செய்தீர்களா, அல்லது போனில் அவரை தொடர்பு கொண்டீர்களா, இதுவரை எத்தனை பேர் இப்படி அனுமதியின்றி வெளியே சென்று உள்ளனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு புகார் செய்தீர்களா என சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.