பிரம்மபுத்ரா மீது அசாம் மாநிலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய ஈரடுக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் சுமார் 5 கி.மீ., நீளத்திற்கு கட்டப்பட்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்ட 1997 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா அடிக்கல் நாட்டினார். எனினும் 2002 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பாலம் திட்டமிடப்பட்டு சுமார் 21 ஆண்டுகள் கழித்தே பொதுமக்கள் போக்குவரத்துக்கு திறக்கப் பட்டுள்ளது. பாஜக.,வின் வாஜ்பாய் ஆட்சியில் தொடங்கப்பட்டு, பாஜக.,வின் நரேந்திர மோடி ஆட்சியில் இது நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, போகிபீல் பாலத்தால் வர்த்தக வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேமஜி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 16 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இங்கு வந்ததாக குறிப்பிட்டார். போகிபீல் பாலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை அவருக்கு இருந்தது என்றார்.
இந்த பாலம் திறக்கப்பட்டது வாஜ்பாய்க்கான அஞ்சலி என்று மோடி குறிப்பிட்ட மோடி, 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிய பின்னர், அவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவடையவில்லை என குற்றம் சாட்டினார்.
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலை மாறி, உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு, பணிகளை உடனடியாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய மோடி, நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்கு முக்கியப் பங்காற்றுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி, போகிபீல் பாலம் அசாம் மக்களுக்கு உயிர்நாடியாக இருக்கும் என்றார்.
மேலும், நாட்டின் மற்ற பகுதிகளுடனான தொடர்பை அதிகரிக்க இந்த பாலம் உதவும் என்றும் போகிபீல் பாலத்தால் வர்த்தக வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்றும் உறுதி கூறினார்.
மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்லாண்டுகளாக நாட்டின் வடகிழக்குப் பகுதிகள் தனித்து விடப் பட்டிருந்தன. அதனால் வடகிழக்கில் மதமாற்றங்கள் அதிகரித்து, மக்கள் துயரத்தை சந்தித்து வருகின்றனர். பாஜக., ஆட்சியில் மக்களின் வளர்ச்சி, தேவைகளுக்கான கவனம் வடகிழக்கில் செலுத்தப் படுவது, தேசிய எண்ணத்தை வளர்த்தெடுத்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியப் படும்.