இலங்கையில் ஞாயிற்றுக் கிழமை நேற்று கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பண்டிகை நாளில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நேற்று எட்டு இடங்களிலும், இன்று ஒரு குண்டுவெடிப்புமாக மத பயங்கரவாதத்தின் கோர முகத்தை முதல் முறையாக அந்நாடு பார்த்தது.
ஆனால், இத்தகைய எண்ணத்துடன் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டும் உளவுத் தகவல் முன்பேயே கிடைத்தும் கூட, இலங்கைக் காவல் துறை அலட்சியப் போக்குடன் இருந்ததாகக் கூறப் படுகிறது. அதற்குக் காரணம், இதுபோன்ற மத பயங்கரவாதத் தாக்குதல்கள் தங்கள் நாட்டில் ஏற்படாது என்ற எண்ணம் தான்!
இலங்கையிலுள்ள முக்கிய சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று 10 நாள்களுக்கு முன்பாகவே அந்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இலங்கையின் கொழும்பு பகுதியிலுள்ள முக்கிய சர்ச்களில் நேற்று காலை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. காலையில் தொடர்ச்சியாக ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பின்னர், மதியம் 2 மணி அளவிலும், 3 மணி அளவிலும் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகள் நடைபெற்றன.
3 மணி அளவில் கொழும்பு தெமடகொட பகுதியில் இலங்கை வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தன, ‘இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெகிவாலா உயிரியல் பூங்கா அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடந்த பிறகு, அங்கே சென்ற தேசிய புலனாய்வு அதிகாரிகள், அங்கிருந்து சந்தேகப்படும் நபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர், அளித்த தகவலின் அடிப்படையில் மீதமுள்ள நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே உளவுத் துறை கொழும்பில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை கொடுத்தும், அதனை உரியவர்கள் உதாசீனம் செய்தமையால் இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதா என்பது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், சி.ஐ.டி. சிறப்புக் குழுவினர் ஆராயவுள்ளதாகவும் ரூவன் குணசேகர தெரிவித்தார்.
ஒரு மத அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் செயலாளரையும் அதன் தலைவரையும் குறிப்பிட்டு, அவர் கொழும்பில் தற்கொலை தாக்குதல்களை நடத்தப்போவதாக தேசிய உளவுத்துறை போலீஸார் அதிபருக்கு கொடுத்த அறிக்கையை நினைவூட்டி, சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் வெளியாயின.
மேலும், கிழக்கு ராணுவ கட்டளைத் தளபதி, கிழக்கில் உள்ள சில குழுக்களால் கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக கொழும்பு பாதுகாப்பு தலைமையகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இருப்பினும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் படாததால், இந்த தாக்குதல்கள் சாத்தியமாகியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இப்போது எந்த கருத்தையும் வெளியிட முடியாது என ராணுவ தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறினார்.
தற்போது வெளியான ஆவணம் போலியானதா இல்லையா என கூற முடியாது என தெரிவித்த அவர் அது தொடர்பாக, சி.ஐ.டி. விசாரணையில் கவனம் செலுத்தப் பட்டுள்ளதாக கூறினார். எனினும் அந்த ஆவணத்தை ஒத்த ஓர் ஆவணம், இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட இருப்பதை வெளிப்படுத்தி உளவுத் துறையினரால் வழங்கப்பட்டது என்று பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஒப்புக்கொண்டார்!
இத்தனை உளவுத் தகவல்கள் தங்களுக்கு முன்னமேயே கிடைத்தும், பொதுமக்களை கவனமாகப் பாதுகாக்க இயலாமல் போனது குறித்து பாதுகாப்பு அமைச்சர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.
இவை எல்லாவற்றிற்கும் காரணம், அப்படியெல்லாம் நடக்காது என்ற மெத்தனம், இஸ்லாமிய பயங்கரவாதம் நம் நாட்டிற்குள் புகுந்துவிடாது என்ற நம்பிக்கை! ஆனால் அந்த நம்பிக்கையைத்தான் வழக்கம் போல் மத பயங்கரவாதிகள் குலைத்து விட்டனரே!