கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழந்துள்ள நிலையில், 1,20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. அதில், இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து செலவையும் மாநில அரசே ஏற்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தமிழக மக்கள் தேவையின்றி வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மழலையர் பள்ளிகளும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும், விடுமுறை நாட்களில் குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு குழுவாக விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பொதுமக்கள் அடுத்த 15 நாட்களுக்கு பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை வணிக வளாகங்களையும் திரையரங்குகளையும் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.