
பெரிதும் எதிர்பாக்கப்பட்ட குரூப் – 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்- 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 18 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியானது.
முதலில் அறிவிக்கப்பட்ட 7,301 பணியிடங்களை தற்போது 10,178 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கான ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். தபால் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி கலந்தாய்வில் ஒதுக்கப்படும். தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால், அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.