விநாயக தாமோதர சாவர்க்கர் (வி.டி. சாவர்க்கர்)
(பிறப்பு: மே 28, 1883, – இறப்பு: பிப்ரவரி 26, 1966)
இந்திய விடுதலைப் போரில் எத்தனையோ பேர் மகத்தான தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் ‘வீர சாவர்க்கர்’ என்று அழைக்கப்பட்ட விநாயக தாமோதர சாவர்க்கர்.
வெறும் சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமல்லாமல், பன்முகம் கொண்டு திகழ்ந்தவர். புரட்சியாளர், சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்,… இப்படி பன்முக ஆளுமை கொண்டிருந்த சாவர்க்கர், அபிநவ பாரத சங்கம் முதல் ஹிந்து மகா சபா வரை, தனது அரசியல் பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாகவும் அமைத்துக் கொண்டார்.
அன்னிய நாடுகளுக்கு எதிராக இன்றெல்லாம் இந்த நாட்டிலே கிளர்ச்சிகளைச் செய்வதும், போராட்டங்களில் ஈடுபடுவதையும் ஓர் அரசியல் நிகழ்வாக இந்நாளில் நாம் காண்கிறோம். ஆனால், ஆங்கிலேயரின் சொந்த நாட்டுக்கே சென்று அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர் சாவர்க்கர்.
மதன்லால் திங்ரா என்ற மாவீரன் லண்டனில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்று இந்தியர்களின் சுதந்திர தாகத்தை அந்நாட்டு மக்களுக்கு புரியச் செய்தார் (1, ஜூலை, 1909). அதற்கு பின்புலமாக இருந்த சாவர்க்கர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார். அப்போது கப்பலில் இருந்து தப்பி பிரான்ஸ் கடற்கரையில் ஏறிய அவரை பிரிட்டீஷ் போலீசார் துரத்தி வந்து கைது செய்தனர். அந்தக் கைது காரணமாக, இரு ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சட்டப் போர் நடந்தது. இது உலக அளவில் அப்போது பலத்த வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது சகோதரர்கள் இருவரும்கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதனால் அவர்களும் கைதானார்கள். சாவர்க்கர் அந்தமான் சிறையில், செல்லுலர் அறையில் அடைக்கப்பட்டு பயங்கர சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்தார் (1911 – 1924). பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட அவர், தனது வாழ்வின் பிந்தைய நாட்களில் சமூக சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆலயம் அமைத்தல், தீண்டாமைக்கு எதிர்ப்பு, மதமாற்றத்துக்கு எதிர்ப்பு, சுய சரிதை எழுதுதல், வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுதல் என அவரது வாழ்க்கை அமைந்தது.
பின்னாளில் ஹிந்து மகா சபா என்ற அரசியல் கட்சியை காங்கிரசுக்கு எதிராக அமைத்தார். ஆனால், மகாத்மா காந்தி கொலையில் சம்பந்தப் படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். பிறகு இவர் மீது குற்றம் ஏதுமில்லை என்று நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்று விடுவிக்கப்பட்டார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட போதெல்லாம் சிறிதும் கலங்காத சாவர்க்கர், சுதந்திர இந்தியாவில், தமது சொந்த அரசே தன்னை பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்துவிட்டதே என்று மனமுடைந்தார். அந்த நிலையிலேயே இறுதிக் காலத்தைக் கழித்த சாவர்க்கர், அதற்காக சும்மா இருக்கவும் இல்லை. சோர்ந்து விடவும் இல்லை. நாட்டின் அரசியலை வழிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியபடியே இருந்தார்.
சாவர்க்கர் மிகத் தீவிரமான எழுத்தாளர். அந்தமான் சிறையில் இருந்தபோது தான் செய்த ஆராய்சிகளை மனதில் இருத்தி, அவர் எழுதிய இந்தியாவின் வரலாறு நமது மகோன்னதமான பெருமைகளை நமக்கு நினைவுபடுத்துகிறது. அவரது எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற நூலே, 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர் பற்றிய முழுமையான பதிவாகும்.
நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தங்கள் ரத்தம் சிந்திப் போராடிய மறவர்களுள் சாவர்க்கர் முதன்மையானவர். அவரது நினைவே நமக்கு நாட்டைக் காக்கும் துணிவையும் தேசபக்தியையும் நல்கும். சாவர்க்கரது வாழ்வே ஒரு வேள்வி. அவரது வாழ்வை முழுமையாக அறிய, அவர் எழுதிய நூல்களையும் அவரைப் பற்றிய நூல்களையும் இளைய தலைமுறையினர் படிக்க வேண்டும்.
வீர் சாவர்க்கர் – ஒரு காவியத்தலைவன்
பூரண அரசியல் சுதந்திரத்தை 1900லேயே துணிவுடன் பிரகனபடுத்திய முதல் அரசியல் தலைவர்.
1905ல் அந்நியத் துணிகளை தீரமுடன் பகிஷ்க்கரித்த முதல் அரசியல் தலைவர்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக 1906ல் சர்வதேச அளவில் புரட்சி இயக்கத்தை ஏற்பாடு செய்த முதல் இந்தியர்.
- தேச விடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்ததினால் சட்டம் பயின்று அதற்க்கான தேர்வுகளில் தேர்ச்சியுற்றும் ஆங்கிலேய வழக்குரைஞர் அவையில் (பார் கவுன்சில்) சேர அனுமதி மறுக்கப்பட்ட முதல் இந்திய மாணவர். (1909)
- லண்டனில் கைது செய்து தொடரப்பட்ட வழக்கினால், பிரிட்டிஷ் நீதிமன்றத்திற்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்திய ஒரே இந்தியத் தலைவர். மேலும் தப்பியோடிய குற்றம் புரிந்தோருக்கான ஆணை மற்றும் ஆட்கொணர்வு ஆணை (ஹேபியஸ் கார்பஸ்) ஆகியவற்றிற்கான பொருள் விளக்கத்திற்காக இவ்வழக்கு இன்றளவும் குறிப்பிடபடுகிறது. (Rex Vs Governor of Brixton Prison, ex-parte Savarkar)
- இந்திய வரலாற்று ஆசிரியனின் புத்தகம் ஒன்று முதன் முதலாக தடை உத்திரவுக்கு உள்ளானது எனில் அது சாவர்க்கரின் ‘1857 முதல் சுதந்திரப் போர்’ என்னும் புத்தகமே ஆகும். இப்புத்தகம் அச்சிடப்படுவதற்கு முன்னரே பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1909ல் தடை செய்யப்பட்டது. அரசின் தடையுத்திரவு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அன்றைய கவர்னர் ஜெனரல் அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்யுமாறு அஞ்சலகத் தலைவருக்கு ஆணைப்பிறபித்தார்.
- ஆங்கிலேய அரசிடமிருந்து தப்பி பிரஞ்சு தேசத்தில் கைது செய்யப்பட்டு மக்கள் கவனத்தைக் கிளறிவிடும் வழக்காக ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதி மன்றத்தில் நடப்பதற்கு காரணமாயிருந்த முதல் அரசியல் கைதி. இவ்வழக்கு இன்றளவும் பல சர்வதேச ஒப்பந்தங்களில் குறிப்பிடபடுகிறது. (1910)
- தேசவிடுதலைக்கு பாடுபட்டதற்காக ஓர் இந்தியப் பல்கலைகழகம் ஒரு பட்டதாரிக்கு வழங்கியப் பட்டதை முதன் முதலில் திரும்பப் பெற்றதேனின் அது இவரிடமிருந்துதான். (1911)
- காகிதமும் எழுதுகோலும் மறுக்கப்பட்டதால் தான் இயற்றிய கவிதைகளை சிறைச்சாலை சுவர்களில் கிறுக்கியும், பத்தாயிரம் வரிகளை தானும் தன் சக கைதிகளும் மனப்பாடம் செய்தும் பின்னாளில் அச்சிட்ட முதல் கவிஞர், உலகளவில்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்ட காலத்தில், பத்து வருடங்களுக்கு குறைவான காலத்தில், அங்கு நிலவிய தீண்டாமை கொடுமையை ஒழித்த முதல் புரட்சியாளர்.
- ஓர் இந்திய அரசியல் தலைவர் முதன் முதலில் வெற்றிகரமாக நடத்திய சில சமூக சீர்திருத்த நடவடிக்கைகள்-
- தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களையும் இதர இந்துக்களையும் சேர்த்து விநாயகர் பூஜை. (1930)
- சமபந்தி போஜனம். (1931)
- “பதிதபாவன” கோயில். (22 பிப்ரவரி1910)
- தேனீர் அருந்தும் நிலையம் (01 மே 1933) ஆகியவற்றை நடத்தியவர்.
- ஐம்பதாண்டு தேசாந்தர தண்டனையை உலக அளவில் பெற்ற முதல் அரசியல் கைதி. பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியில் இதுபோன்ற உத்தரவு வேறு ஒருவருக்கு வழங்கங்கபட்டதில்லை.
- வடக்கிருத்தல் (ஆத்ம சமர்ப்பணம்) எனும் உயரிய யோக முறையினை கடைப்பிடித்து உயிர் துறந்த முதல் அரசியல் தலைவர். (26 பிப்ரவரி 1966)