ஸ்மார்ட் போன், சமூகவலைதளம் அதன்மூலம் ஏற்படும் நட்பு இவற்றால் பெண்களுக்கு ஆபத்து வந்து கொண்டேதான் இருக்கிறது.ஆனாலும் படிக்கும் வயதிலேயே கையில் போனை வைத்துக்கொண்டு தவறான வழிக்கு செல்கின்றனர் இளைய சமுதாயத்தினர்.
தெலுங்கானா மகபூப் நகரில் வசித்து வருபவர் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி. இவருக்கு நவீன் ரெட்டி என்ற இளைஞருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் நட்புடன் பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க முடிவு செய்து இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மெகபூப் நகரின் சங்கராய பள்ளி குடியிருப்புக்கு அருகிலிருந்த பாழடைந்த பகுதியில் தனியாக சந்தித்துள்ளனர்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நவீன் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். மேலும் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வலுக்கட்டாயமாக அப்பெண்ணை அணைக்க முயன்று உள்ளார் இதனால் அந்த சிறுமி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த சிறுமியின் தலை கல்லில் பயங்கரமாக அடிபட்டுள்ளது. இதனால் அதிகளவு ரத்தம் வெளியேறிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். வெகு நேரமாய் மகளை காணாத பெற்றோர் மகளை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அவர் நவீன் உடன் சென்றதை கண்டறிந்துள்ளனர். பின்னர் நவீனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நவீனின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.