ராமர் கோவில் கட்டுமானம் செய்வதற்காக இன்று பிரதமரால் ஏற்படுத்தப்பட்ட ராமஜன்ம பூமி தீர்த் க்ஷேத்ரா டிரஸ்ட்டின் பதிவு அலுவலகம் மூத்த வழக்கறிஞர் முன்னாள் அட்டர்னி ஜென்ரல் கே.பராசரன் தில்லி வீட்டு விலாசத்தில் இயங்கவுள்ளது.!
இதை விட தகுதியான வேறு ஒரு விலாசம் இருக்கவே முடியாது என்று புகழாரம் சூட்டுகின்றனர் அரசியல் மட்டத்தில். தன்னுடைய 92 வது வயதிலும் நின்று கொண்டே வாதாடி ஒவ்வொரு பக்தனின் ஊனோடும் உணர்வோடும் கலந்துவிட்ட 520 வருட ராமர் கோவில் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்த மஹானுபாவர் இவர் என்று கூறுகின்றனர்.
ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையில் இடம்பெறும் உறுப்பினர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ராமர்கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞரும், தமிழகத்தை சேர்ந்தவருமான பராசரன், அறக்கட்டளை தலைவராக செயல்படுவார்!
மக்களவையில் பிரதமர் மோடி கூறும் போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவற்கான திட்டம் தயாராக உள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப் பட்டுள்ளது. அது ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் செயல்படும் என தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கும் முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளையில், தலித் உறுப்பினர் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக இருப்பர் என தெரிவித்திருந்தார். அறக்கட்டளையின் அலுவலகம் ஆர் – 20, கிரேட்டர் கைலாஷ் பகுதி-1, புதுடில்லி என்ற முகவரியில் செயல்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தபோது…
- தலைவராக தமிழகத்தை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான பராசரன் செயல்படுவார்.
இதன் உறுப்பினர்களாக,
ஜகத்குரு சங்கராச்சார்யா ஜோதிஷ்பீததீஸ்வர் சுவாமி வசுதேவானந்த் சரஸ்வதி ஜி மஹராஜ், பிரயாக்ராஜ்.
ஜகத்குரு மாதவச்சார்யா சுவாமி விஸ்வ பிரசன்னதீர்த்தஜி மஹராஜ், பெஜாவர் மடம், உடுப்பி.
யுகபுருஷ் பரமானந்த் ஜி மஹராஜ், ஹரித்வார்.
சுவாமி கோவிந்தேவ் கிரி ஜி மஹராஜ், புனே.
ஸ்ரீ விம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா அயோத்தி.
ஹோமியோபதி டாக்டர் அனில் மிஸ்ரா, அயோத்தி.
ஸ்ரீ கமலேஸ்வர் சவுபால், பாட்னா.
9 மற்றும் 10வது உறுப்பினர்களை அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளவர்கள், ஹிந்து மதத்தை பின்பற்றும் நபரை, பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வு செய்வர்.
மகந்த் தினேந்திர தாஸ், நிர்மோகி அஹாரா, அயோத்தி பைதக், அயோத்தி.( நிர்மோகி அஹாரா அமைப்பின் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி இவர் நியமிக்கப்படுகிறார்)
மத்திய அரசில், இணை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரத்தில் உள்ள, ஹிந்து மதத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமிக்கும்
உ.பி., மாநில அரசில், செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
அயோத்தி கலெக்டர் உறுப்பினராக இருப்பார். அவர் ஹிந்துவாக இல்லாத பட்சத்தில், அயோத்தி கூடுதல் கலெக்டர், உறுப்பினராக இருப்பார்.
ராமர் கோயில் வளாகம் தொடர்பான விவகாரங்களில், நிர்வாகம் மற்றும் வளர்ச்சி கழக தலைவர் ஒருவரை அறக்கட்டளை உறுப்பினர்கள் நியமிப்பார். அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவராக இருப்பார்கள். இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்ற முன்னாள் வழக்கறிஞரும் ராமஜென்மபூமி வழக்கில் இந்துக்கள் தரப்பில் வாதாடியவருமான கே.பராசரன் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தில்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள இவரின் வீடு ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பதிவு செய்யப்பட்ட அலுவலகமாகச் செயல்படும்.
ஸ்ரீரங்கத்தில் 1927- ஆம் ஆண்டு, பிறந்த பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான பராசரனின் மகன்கள் மோகன், சதீஷ், பாலாஜி ஆகியோரும் வழக்கறிஞர்களே. 1958- ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய இவர், 1980- ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் 1983- ம் ஆண்டு முதல் 89- ம் ஆண்டு வரை இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்துள்ளார்.
இந்திரா காந்தியை எதிர்த்து கருத்துகளை வெளிப்படுத்தும் அளவுக்கு இவர் தைரியம் கொண்டவர். 1985- ம் ஆண்டு `இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் அலுவலகத்தை இடிப்பதற்காக இந்திரா காந்தி அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அப்போது, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த இவரின் அறிவுரையை மீறி இந்திரா அரசு செயல்பட்டது. இதன் காரணமாக, இந்த வழக்கில் வாதாட மறுத்த பராசரன், `நிர்பந்தித்தால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்’ என்றும் வெளிப்படையாக அறிவித்தார். பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
ராமஜென்ம பூமி வழக்கில் வழக்குக் கட்டணமாக பராசரன் ரூ.1 மட்டுமே சம்பளமாகப் பெற்றார்.