நாடு முழுதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பொதுமக்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சேவை அமைப்புகள் அன்னதானம் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பாக சென்னையில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தாக்குதல் குறித்த செய்தி வெளியானது முதல், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் மஹா சன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளும், சன்னிதானம் ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகளும் நாட்டில் உள்ள சிருங்கேரி மடங்களின் சீடர்களுக்கு நலிவுற்று உள்ள ஏழை மக்களுக்கு இனம் மதம் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் ஒரு வேளையாவது அன்னதானம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இது குறித்து நாடெங்கிலும் உள்ள கிளை மடங்களின் வழியே அந்த அந்தப் பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி கௌரிசங்கர் வழிகாட்டினார்.
அதன்படி சென்னை சிருங்கேரி பாரதீ வித்யாஸ்ரமத்தின் தலைவரும், அமால்கமேஷன் லிமிடெட் தலைவருமான ஏ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அறிவுரைப்படி, பாரதீ வித்யாஸ்ரமத்தின் செயலாளர் ஜே.எஸ்.பத்மநாபன் மேற்பார்வையில் ஊரடங்கு காரணமாக அவதிக்கு உள்ளாகி இருக்கும் சாலையோர வாசிகள் தொழிலாளர்கள், காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள், மீனவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்ற 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதாரமான முறையில் அரசின் விதி முறைப்படி அன்னதானம் தயாரிக்கப்பட்டு, குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது
மயிலாப்பூரில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் மூலம் மயிலாப்பூர் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடிசைவாழ் பகுதி மக்களுக்கும் மற்றும் ஆவடி சத்சங்கம் மூலம் கண்பார்வையற்ற 500 பேருக்கும் மேல் உணவு வழங்கப்படுகிறது
இந்த சேவையானது ஊரடங்கு அறிவித்த நாள் முதல் செயல்பட்டு வருகிறது என்றும், இதற்காக அதிக அளவில் தன்னார்வலர்கள் பொருள் உதவியும் பண உதவியும் செய்து வருகிறார்கள் என்றும் இந்த அன்னதான குழுவின் ஒருங்கிணைப்பாளர் தர்மசங்கர ஐயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.